துபாயிலிருந்து அவசர அவசரமாக ரெய்னா இந்தியா திரும்பியது ஏன்? அதிர்ச்சி பின்னணி

0
314

துபாயிலிருந்து அவசர அவசரமாக ரெய்னா இந்தியா திரும்பியது ஏன்? அதிர்ச்சி பின்னணி

ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய சி.எஸ்.கே அணியின் துணை கேப்டன் ரெய்னா அவசமாக இந்திய திரும்பியது ஏன் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சண்டிகர், இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டார். எனினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற செப்டம்பரில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சக வீரர்களுடன் புறப்பட்டு சென்றார்.

கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக அணி வீரர்கள், ஐ.பி.எல். ஊழியர்கள், பி.சி.சி.ஐ. ஊழியர்கள் மற்றும் துணை பணியாளர்கள் என மொத்தம் 1,988 பேருக்கு ஆகஸ்ட் 20ந்தேதி முதல் 28ந்தேதி வரை பி.சி.சி.ஐ. நிர்வாகம் கொரோனா பரிசோதனைகளை செய்தது.

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர், அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பி விட்டதாகவும் அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பஞ்சாபின் பதன்கோட் மாவட்டத்தில் தரியல் கிராமத்தில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வசித்து வந்துள்ளனர். அசோக் அரசு ஒப்பந்ததாரராக இருந்துள்ளார். அவரது வீட்டுக்குள் புகுந்து கொள்ளைக்காரர்கள் தாக்கியுள்ளனர். இதில் ரெய்னாவின் மாமா உயிரிழந்து உள்ளார். மற்ற 4 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, கடந்த 19ந்தேதி இரவில், இந்த சம்பவம் நடந்துள்ளது. ரெய்னாவின் மூத்த சகோதரர் சியாம் லால், கொல்லப்பட்டவர் ரெய்னாவின் மாமா என உறுதிப்படுத்தி உள்ளார். சம்பவம் நடந்தபொழுது, வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்துள்ளனர். கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி விட்டு பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பியோடி உள்ளனர் என கூறினர்.

இந்த சம்பவத்தில் அசோக் குமாரின் தாயார் சத்யா தேவி (வயது 80), மனைவி ஆஷா தேவி, மகன்கள் அபின் மற்றும் குஷால் ஆகியோர் காயமடைந்து உள்ளனர். இவர்களில் சத்யா தேவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டார் என்று போலீசார் கூறியுள்ளனர்.