திரைப்பட, தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

0
317

திரைப்பட, தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி, இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் சில தளர்வுகளும் வழங்கப்பட்டு உள்ளன. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இதனால், திரையுலகை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு பலன் கிடைத்துள்ளது. இதுபற்றி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் ஆகிய விதிகளை பின்பற்றி படப்பிடிப்புகளை நடத்தி கொள்ளலாம் என கூறியுள்ளார்.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை நடத்தி கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி,

* படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

* வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம்.

* படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

* குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.

* படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.

* உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.