அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் ஜோ பைடன்

0
350

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் ஜோ பைடன்

நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. தொடக்கத்தில் தேர்வுக்குழு வாக்குகள் மற்றும் முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில் இருவருக்கும் பெரிய இடைவெளி இல்லை என்பதால் வெற்றியாளர் யார் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவியது. நவம்பர் 5-ம் தேதி நிலவரப்படி பைடன் 238 தேர்வுக்குழு வாக்குகளையும், டிரம்ப் 213 வாக்குகளையும் பெற்றிருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக டிரம்ப் முன்னிலை வகித்து வந்த விஸ்கான்சின் மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்கள் பைடனுக்கு சாதகமாக மாறின. விஸ்கான்சினின் 10 வாக்குகள் மற்றும் மிச்சிகனின் 16 வாக்குகளைப் பெற்ற பைடன் மொத்தம் 264 வாக்குகளைப் பெற்று வெற்றியை நெருங்கினார்.

மெய்ன் மாகாணத்தில் அம்மாகாண முறைப்படி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தேர்வுக்குழு வாக்குகள் பகிர்ந்து அளிக்கப்படும் என்பதால் மொத்தமுள்ள 4 வாக்குகளில் ஏற்கனவே மூன்று பைடனுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், டிரம்ப் ஒரு வாக்கைப் பெற்றதால் அவரது எண்ணிக்கை 214 ஆக உயர்ந்தது. இதனிடையே விஸ்கான்சின், மிச்சிகன் மாகாண முடிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக ட்ரம்ப் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில், கடந்த 3 தினங்களாக தாமதமாகிக் கொண்டிருந்த மாகாணங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளிவந்தநிலையில், 290 எலட்ரோல் வாக்குகளைப் பெற்று அதிபராக வென்றார் ஜோ பைடன்.