“அக்கா குருவி’ படம் மாதிரி படங்கள் வரவேண்டும்..” இளையராஜா

0
162

“அக்கா குருவி’ படம் மாதிரி படங்கள் வரவேண்டும்..” இளையராஜா

‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சாமி. இவரின் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு உருவான ‘கங்காரு’ திரைப்படத்திற்குப் பிறகு உருவாகியுள்ள திரைப்படம் ‘அக்கா குருவி’. உலகப்புகழ் பெற்ற ஈரானிய திரைப்படமான ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ (Children of Heaven) படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக இந்தப்படம் உருவாகியுள்ளது.

ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து பள்ளியில் படிக்கும் அண்ணன், தங்கைக்கு இடையே ஒரு ஷுவை கொண்டு, பாசத்தை மனதை உலுக்கும் வகையில் அற்புதமான படைப்பாக கொடுத்திருப்பார் இயக்குநர் மஜித் மஜிதி. கடந்த 1997-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், தங்கை பள்ளிக்கு வேகமாக ஓடும்போது ஷு, சாக்கடை நீரில் விழுந்துவிடும். இதனால் பள்ளிக்கு செல்லாத முடியாத சூழ்நிலையில், வீட்டில் பெற்றோரிடமும் சொல்ல முடியாது. இந்நிலையில், அண்ணன் தங்கை இருவரும் ஒரே ஷுவை பயன்படுத்தி வெவ்வேறு பள்ளியில் படிக்கும் நிலையில், எப்படி சமாளிக்கின்றனர் என்பதே கதைக்களமாக இருக்கும்.

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைத்தான் இயக்குநர் சாமி தமிழ் மற்றும் தெலுங்கில் ‘அக்கா குருவி’ ஆக ரீமேக் செய்கிறார். கொரோனா காலத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட இந்தப் படம், ஊரடங்கால் வெளியிடப்படாமல் இருந்தநிலையில், தற்போது மே மாதம் 6-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் 3 பாடல்கள் உள்ளநிலையில், மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார்.

படம் குறித்து இளையராஜா கூறியதாவது…

சாதாரணமான நாட்களில் நான் உலக சினிமாக்கள் பார்ப்பது வழக்கம், நான் இசையமைக்கும் சினிமாவை பார்ப்பதோடு சரி, மற்ற சினிமாக்களை அவ்வளவாக பார்க்க நேரம் கிடைப்பதில்லை. உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கும். அப்படி சில்ட் ரன் ஆஃப் ஹெவன் படம் பார்த்த போது மிக ஆச்சர்யமாக இருந்தது. ஒரு சிறு ஷூவை வைத்து கொண்டு, சிறு குழந்தைகளின் உலகத்தை ஒரு சின்ன பிரச்சனையை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை  மிக தத்ரூபமாக, இப்படி ஒரு அற்புதமான சினிமாவாக தந்துள்ளார்களே என ஆச்சர்யமாக இருந்தது. நம் தமிழ்நாட்டில்  ஏன் இப்படி படங்கள் எடுப்பதில்லை, ஏன் வருவதில்லை  என வருத்தமாக இருந்தது. ஒரு கலைஞனுக்கு  உயர்வான சிந்தனை தோன்றினால் தான் அவனை தாக்கினால் தான்.  இவன் உயர்வான ஒன்றை உருவாக்க முடியும்.  இப்படி படம் எடுக்க முடியும். அது நம் இயக்குநர்களிடம் இல்லை.  ஆனால் நம்ம இயக்குநர் சாமி அதே படத்தை, நம்ம ஊரில் எடுத்தால் எப்படி இருக்கும் என நம்ம ஊருக்கு தகுந்தவாறு அந்த கதையை மாற்றி, ஒரிஜினல் படத்தை விட சுவாரஸ்யமாக அருமையாக எடுத்திருக்கிறார். நான் இந்த மாதிரி புது இயக்குநர்கள் வர வேண்டும் என்றும் அவர்களுக்கு இசையமைப்பதற்கும் காரணம் அது தான்.  மணிரத்னம் முதல் இசையமைத்த காரணம் அது தான். நல்ல படைப்புகள் வர வேண்டும். இந்தப்படங்களை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும் இது மாதிரி படங்கள் ஜெயிக்க வேண்டும். மக்களின் ரசனை வளர வேண்டும் இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி.

சென்னையில் ஏப்ரல் 25-ம் தேதி இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குநர் அமீர், “ ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் இயக்குநர் மஜித் மஜிதிக்கு ‘அக்கா குருவி’ போட்டு காட்டப்பட்டுள்ளது. அவர் படத்தை பார்த்துவிட்டு இசையை பற்றி குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இளையராஜாவின் இசை தமிழர்கள், உலக தமிழர்களை தாண்டி மொழி தெரியாதவர்களை கூட கவர்ந்துள்ளது. அவருக்கு ஒரு பாரத ரத்னா இல்லை. ஐந்து பாரத ரத்னா கொடுத்தாலும் தகுதியானது. மொழி தெரியாதவர்கள் கூட பாராட்டுவதை விட ஜனாதிபதி பதவியோ அல்லது வேறு எந்த பதவியோ பெரியது கிடையாது. இளையராஜா இங்கு இருந்தால் கூட நான் இந்த கருத்தை கூறியிருப்பேன்” என்று தெரிவித்தார்.

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, பிரபல தியேட்டர் நிறுவனமான பிவிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.