மாணவர்களின் மனிதக் கடவுளே’ என்றும் ’எங்கள் ஓட்டு எங்களுக்கே’ முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் மாணவர்கள்
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றினால் மார்ச் மாதம் முதலே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் தான் கல்லூரி இறுதி பருவத் தேர்வைத் தவிர மற்ற தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து ஆல் பாஸ் என்று அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இத்துடன் இல்லாமல் அரியர் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருக்கும் அனைவரும் ஆல் பாஸ் என்றும் அறிவித்தார்.
கல்லூரிப் படிப்பை முடித்தும் அரியர் தேர்வுகளைக் கிளியர் செய்ய முடியாமல் பல வருடங்களாகக் கல்லூரிக்கும் வீட்டுக்கும் நடந்து தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்களைத் திக்குமுக்காடச் செய்தது முதல்வரின் இத்தகைய அறிவிப்பு. கல்லூரி மாணவர்கள் முதல்வருக்கு பேனர்களை வைத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இல்லாமல் கடந்த சில நாள்களாகவே கே.ஜி.எப் பேக்ரவுண்டு இசையுடன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேஸ்புக், வாட்ஸ்அப் ஸ்டேடஸ்களில் வீடியோக்களை வெளியிட்டும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் இன்று தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு சார்பில் தமிழ்ப் பத்திரிக்கையொன்றில் ஒரு பக்க அளவுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து விளம்பரம் வெளியாகியுள்ளது. அந்த விளம்பரம், பிகில் பட போஸ்டர் பாணியில் லட்சக்கணக்கானோர் சூழ கைகூப்பி எடப்பாடி பழனிசாமி நின்றபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த விளம்பரத்தின் ஹைலைட்டே அதில் உள்ள வசனங்கள் தான். அதில், ’மாணவர்களின் மனிதக் கடவுளே’ என்றும் ’எங்கள் ஓட்டு எங்களுக்கே’ என்றும் தெரிவித்துள்ளனர் மாணவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புண்ணியத்தில் ஆல் பாஸ் செய்து டிகிரி பெற்றவர்கள் பலரும் இந்த விளம்பரப் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்!