கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் – தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கோவை மருதமலை முருகன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
மதுரையில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மற்றும் கோவையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிக்கும் அன்னதான திட்டத்தை திமுக உருவாக்கியது. பின்னர் அத்திட்டத்தை விரிவுபடுத்திடும் வகையில் 3 ஆண்டுகளில் திருச்செந்தூர், சமயபுரம், ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை, ஆனைமலை, பெரியபாளையம் உள்பட 9 பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தை துவக்கி வைத்ததற்காக கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இதற்கு முன்னர் மருதமலை திருக்கோயிலில் அன்னதான திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 100 பக்தர்கள் பயன் அடைந்தனர். இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 11 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 760
திருக்கோயில்களில் 1 வேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம்
ஆண்டுக்கு 3 கோடியே 36 லட்சம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.