விளையாட்டு வீரர்கள் 821 பேருக்கு வாழ்நாள் ஓய்வூதியம் : மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்
சென்னை, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. அனுராக் தாகூர் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
விளையாட்டு வீரர்களின் ஓய்வுக்கு பிறகு, அவர்களின் வாழ்வாதாரத்துக்காக மாத ஓய்வூதியத்தை, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய நிதியிலிருந்து மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், ஒலிம்பிக், பாராலிம்பிக், காமன்வெல்த், ஆசிய மற்றும் உலககோப்பை போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்று 30 வயதை அடைந்த பிறகு, ரூ.12,000 முதல் ரூ.20,000 வரை ஒய்வூதியம் வழங்கப்படுகிறது.
இந்த ஓய்வூதியம் எல்ஐசி மூலம் வழங்கப்படுகிறது. இதற்காக எல்ஐசிக்கு, விளையாட்டுத்துறை அமைச்சகம், மிகப் பெரிய தொகையை செலுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ் தற்போது 821 வீரர்கள் வாழ்நாள் ஒய்வூதியம் பெற்று வருகின்றனர்.