“தமிழ் வளர்ச்சி & பண்பாடு முதல்.. பள்ளிக்கல்வித்துறை வரை”: பட்ஜெட்டில் இடம்பெற்ற 64 முக்கிய அறிவிப்புகள்!

0
117

“தமிழ் வளர்ச்சி & பண்பாடு முதல்.. பள்ளிக்கல்வித்துறை வரை”: பட்ஜெட்டில் இடம்பெற்ற 64 முக்கிய அறிவிப்புகள்!

தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளை 2022 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 18 ஆம் நாள் சட்டமன்றப் பேரவை

முன் வைத்து ஆற்றும் உரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!

2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை இந்த பெருமைமிகு பேரவையில் முன்வைக்கும் இந்த நேரத்தில், நமது மாநிலம் எவ்வாறு திகழ வேண்டும் என்று இந்த அரசு விரும்புகின்றது என்பதை, காலத்தை வென்று நிற்கும் அய்யன் திருவள்ளுவரின் குறள் ஒன்றைக் குறிப்பிட்டு, எனது உரையை தொடங்க விரும்புகின்றேன்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து
(குறள் -738)

மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு.

2) கடந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தை நான் தாக்கல் செய்தபோது பல்வேறு புதிய திட்டங்கள், அறிவிப்புகள், சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்தேன். அவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த மனநிறைவுடன் நான் எனது இரண்டாவது வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை இந்த அவையின் முன்வைக்கின்றேன். தமிழர் மரபு, பண்பாடு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, நான் எனது முன்னோர்களையும், அரசியல் ஆசான்களையும், எனக்கு முன்னர் இந்தப் பொறுப்பை வகித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களையும் வணங்கி எனது

உரையைத் தொடங்குகிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் திராவிடக் கொள்கைகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த சேவை ஆகியவற்றின் காரணமாகவே இன்று இம்மாமன்றத்தில் நான் உரையாற்றிக் கொண்டிருக்கிறேன்.

3) என்னுடைய பொதுவாழ்வில் என்றென்றும் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்து, கலங்கரை விளக்கமாகத் திகழும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மே மாதத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை நாங்கள் நிதி மேலாண்மையில் அடைந்துள்ள சாதனைகள் அனைத்துமே அவரது வழிகாட்டுதலாலும், முழு ஆதரவினாலும் மட்டுமே எய்தப்பட்டவையாகும். இந்த வரவு செலவுத் திட்டத்தைத் தொடங்கும்போது, “இன்றைய சூழல்களை மட்டும் கருத்திற்கொள்ளாமல் தமிழ்நாட்டின் வருங்கால சந்ததியினரின் நலத்தையும் கருத்தில் கொண்டு தயாரிக்க வேண்டும்” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். அதை மனத்தில் கொண்டு இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

4) கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்தனர். கோவிட் பெருந்தொற்றின் முதல் அலை பரவலைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக வீரியத்துடன் இரண்டாம் அலை பரவியிருந்த நேரத்தில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றோம். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற முதல் நாளிலேயே ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து மீதமுள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஒரு தொலைநோக்குத் திட்டத்தையும் வகுத்துள்ளார். அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு, வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.இவை மட்டுமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற வரவு செலவுத் திட்ட சட்டமன்றக் கூட்டத் தொடரில் பல முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

5) பதவியேற்ற நாளிலிருந்து இந்த அரசு கோவிட் பெருந்தொற்று, மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை சந்திக்க நேர்ந்தது. 2015 ஆம் ஆண்டில் பெய்த மழையால் சென்னை பெரும் பாதிப்புக்குள்ளானது. அதைக்காட்டிலும் 2021 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பல பகுதிகளில் மிக அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்தது. இருப்பினும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடி நடவடிக்கைகளாலும், கள ஆய்வுகளாலும், இழப்புகளும் இறப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை (ஒமிக்ரான்) தமிழ்நாடு சந்தித்தது. இந்த அரசால் இரண்டாம் அலையின் போது ஏற்படுத்தப்பட்ட கூடுதல் மருத்துவக் கட்டமைப்புகளும், கற்றுக்கொண்ட அனுபவத்தின் பயனாலும் மூன்றாவது அலை மிகச்சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், இந்த எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த மாநில நிதிநிலையில் மேலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது.

6) எதிர்பாராமல் பெருமளவில் செலவினங்கள் ஏற்பட்ட போதிலும், சிறந்த நிதி நிருவாகத்தையும் நிதி மேலாண்மையையும் அரசு கடைப்பிடித்தது.இதன் பயனாக, மொத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வெறும் ஒரு சதவீதம் உயர்வினையே முதல் துணைநிலை மதிப்பீடுகளில் கோரினோம்.

7) 2014 ஆம் ஆண்டு முதல்,வருவாய்ப் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது. முதன்முறையாக இந்த ஆண்டு இந்த நிலை மாற்றப்பட்டு, 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழ்நாட்டின்

வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது. மேலும் இந்த சவாலான ஆண்டிலும் நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது. இந்த அரசின் தீர்க்கமான நடவடிக்கைகளும் நிர்வாகத் திறனுமே இதனை சாத்தியமாக்கியுள்ளது.

8) இந்த உறுதியான நடவடிக்கைகளின் அடித்தளமாக இருப்பவர் திராவிட மாதிரி வளர்ச்சியின் (Dravidian Model) இலக்கணமாகத்திகழ்பவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே. அவரின் ஒவ்வொரு சிந்தனையிலும், செயலிலும், சுயமரியாதை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய திராவிடக் கொள்கைகள் நிறைந்திருக்கின்றன. திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளே இந்த அரசின் ஆணிவேராகும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிந்தனைகளும், செயல்களும், எழுத்துக்களும் இந்த அரசை சிறப்பாக வழிநடத்தி வருகின்றன. திராவிட இயக்கம் சமூகநீதிக்கான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகள் பல புரிந்த போதிலும், இப்போராட்டத்தில் நாம் இன்னும் முழுமையாக வெற்றி அடையவில்லை. எனவே, அனைத்து தளங்களிலும் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற நமது கொள்கையில் நாம் தொடர்ந்து உறுதியாக இருப்போம்.

9) அண்மையில், தாமிரபரணி படுகையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள், பண்டைத் தமிழ் நாகரிகத்தின் தொன்மை, குறைந்தது 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என வெளிப்படுத்தியுள்ளன. உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் நமது தமிழர் நாகரிகமும் ஒன்று என்பதை இது உறுதி செய்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு, தமிழ்ச் சமுதாயத்தின் நீண்ட நெடிய பண்பாட்டின் வழித்தோன்றல் என்றே தன்னைக் கருதுகிறது. நம் நாட்டின் பன்முகப் பண்பாட்டை பாசிச சக்திகள் அழிக்க முயலும் இவ்வேளையில், தமிழ்ச் சமூகத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய வரலாற்றுக் கடமை இந்த அரசுக்கு உள்ளது என்பதை நன்கு உணர்ந்துள்ளோம்.

10) ஒன்றிய மாநில நிதி உறவுகள், தரவு அடிப்படையிலான ஆளுகை (Data Centric Governance), அரசு உடைமைகள் மற்றும் இடர் மேலாண்மை (Asset &Risk Management), அதிக பொறுப்புடைமை மற்றும் உற்பத்தித்திறன் (Increased Accountability and Productivity), சட்டமன்றத்தின் பங்கினை வலுப்படுத்துதல் ஆகிய ஐந்து முக்கிய முன்னெடுப்புகளை, இந்த அரசு நிருவாகத் திறனை உயர்த்துவதற்காக மேற்கொள்ளும் என்று கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்த ஒவ்வொரு முன்னெடுப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒன்றிய மாநில நிதி உறவுகளை ஆய்வு செய்ய சிறப்பு ஆலோசனைக் குழு அமைத்தல், தரவுத் தூய்மை (data purity) திட்டச் செயலாக்கம், மாநிலத்தின் உள்தணிக்கை அமைப்புகளை சீரமைத்தல் போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளன.

11) அண்மையில் நடைபெற்ற நகர்ப்புர உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியானது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செயல்பாட்டையும் தலைமைப் பண்பையும் மக்கள் எந்த அளவிற்கு அங்கீகரித்துள்ளனர் என்பதையும் தமிழ்ச் சமுதாயம் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் பறைசாற்றுகிறது. இது எங்களின் உழைப்பை பன்மடங்கு அதிகரிக்க ஊக்கமளிக்கிறது.

12) இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதே நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். நமது அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒரு இணக்கமான உறவை வடிவமைத்தனர். நமது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க எடுக்கப்படும் தொடர் முயற்சிகள் வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கின்றன. மாநிலங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, மாநிலங்களின் உரிமைகளுக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும்.

13) வரும் நிதியாண்டு மிகவும் இக்கட்டான,பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வாய்ப்புகள் அதிகம்.தற்போது உக்ரைனில் நடைபெற்றும் வரும் போரின் காரணமாக உலகளாவிய பொருளாதார மீட்டெடுப்பு தடைபட வாய்ப்புள்ளது. இதனால் நுகர்வு தேவையில் வீழ்ச்சியும் (demand shocks), உலகளாவிய அளிப்பிலுள்ள பாதிப்புகளும் (global supply disruptions), மாநிலப் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். பணவீக்கம், வட்டி வீதம் ஆகியவை அதிகரிக்குமென பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், கோவிட் பெருந்தொற்றின் தாக்கமும் முற்றிலுமாக நீங்கிவிட்டது என்று தற்போது கூற இயலாது. இது மட்டுமின்றி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முழு இழப்பை அரசு ஏற்பதன் விளைவையும், அகவிலைப்படி உயர்த்தப்பட்டதன் முழு தாக்கத்தையும், கடன் தள்ளுபடியின் தாக்கத்தையும் வரும் நிதியாண்டில் இந்த அரசு சந்திக்க நேரிடும்.

14) இத்தகைய நிகழ்வுகளைக் கருத்தில்கொண்டு, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் நிதி முன்னுரிமைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நமது அரசியல் முன்னோர்களான நீதிக்கட்சியின் காலத்திலிருந்தே, சமூகநீதிக்கான அளவுகோல் திராவிட இயக்கத்திற்கான அடையாளமாகத் திகழ்ந்து வருகின்றன. பொருளாதாரப் பார்வையில் சமூகநலனுக்கும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கும் சம முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த ஆண்டில் பெருந்தொற்றின் காரணமாக சமூகத்தில் நலிந்த பிரிவினர்களின் துயர் துடைப்பதை குறிக்கோளாகக் கொண்டு நாம் பணியாற்றினோம். தற்போது, நமது பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற்று வர, சமூகநலத் திட்டங்களில் எவ்விதக் குறையுமின்றி, நமது முன்னுரிமைகளை மறுபரிசீலித்து சமூகக் கட்டமைப்பு, வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றின் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.

15) மேற்கூறிய அணுகுமுறையின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளுக்கும் திட்டங்களுக்கும் போதிய நிதி வழங்கி, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில்சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவுசெய்யும் விதமாக இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டம் பின்வரும் பொருண்மைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தும்:

• வேளாண்மை உள்ளிட்ட முதன்மைத் துறைகளின் வளர்ச்சி வீதத்தை அதிகரித்தல்.

• சமூகப் பாதுகாப்பினை வலுப்படுத்துதல்

• பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்புத் திட்டங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலை பெறும் திறனை அதிகரித்தல்

• புதிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும் தற்போதிருக்கும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் வாயிலாகவும் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.

• கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டின் மூலம் மகளிரின் முன்னேற்றம்.

• விளிம்பு நிலையில் உள்ளோரின் சமூக-பொருளாதார முன்னேற்றம்.

• அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலம் வறுமையை ஒழித்தல்

• அனைத்துத் தளங்களிலும் சமூகநீதியை நிலைநாட்டுதல்

• தரவுகள் அடிப்படையிலான ஆளுகை வாயிலாக பொதுமக்களுக்கு மானியங்களும் சேவைகளும் முழுமையாகச் சென்றடைவதை உறுதிசெய்தல்

• கட்டமைப்புகள் உருவாக்க போதிய நிதி ஆதாரங்களைக் கண்டறிதல்

• சுற்றுச்சூழலில் நீடித்த நிலைத்த தன்மையையும், தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவத்தையும் உறுதிசெய்தல்

முதல்வரின் முகவரி

16) பொதுமக்களின்குறைகளைஉடனுக்குடன் தீர்த்தும், தேவைகளை நிறைவு செய்தும், மக்கள் நல அரசின் இலக்கணமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நோக்கத்தோடுதான், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையையும், முதலமைச்சரின் தனிப் பிரிவையும் (CM Cell) இணைத்து “முதல்வரின்முகவரி” என்ற புதியதுறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் இதுவரை, 10,01,883 மனுக்களுக்கு உரியதீர்வுகாணப்பட்டுள்ளது.

ஒன்றிய மாநில நிதி உறவுகள்

17) மதிப்புக்கூட்டுவரி நடைமுறையில் இருந்தபோது, தமிழ்நாடு அடைந்த வருவாய் வளர்ச்சியை, சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் எட்ட இயலவில்லை. இதுமட்டுமின்றி, கோவிட் பெருந்தொற்று அனைத்து மாநிலங்களின் நிதிநிலையை பெருமளவில் பாதித்துள்ளது. ‘

இந்நிலையில், சரக்குமற்றும் சேவைவரி இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கும் கால வரையறை30.6.2022 ஆம் நாளன்று முடிவுக்கு வருகிறது. இதனால், வரும்நிதியாண்டில், சுமார் 20,000 கோடிரூபாய்நிதி இழப்பினை தமிழ்நாடு சந்திக்க நேரிடும். கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்க நிலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வருவாய்இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பாததால், இந்த இழப்பீட்டை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு ஒன்றிய அரசிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த நியாயமான கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கும் என நம்புகிறேன்.

18) நாட்டின் மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 6.12 சதவீதமாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 10 சதவீதமாகும். இவற்றிற்கு ஏற்ற நிதிப் பகிர்வை மத்திய நிதிக்குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை.

15 வது மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் 4.079 சதவீதமாகும். 15வது மத்திய நிதிக்குழு ஐந்தாண்டு காலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியமாக மொத்தம் 21,246 கோடி ரூபாயை பரிந்துரைத்துள்ளது. இத்தொகையானது, 14வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 17,010 கோடி ரூபாய் மானியங்களைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு குறிப்பிட்ட மானியங்களையும், துறைகளுக்கு குறிப்பிட்ட மானியங்களையும் 15வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. இத்தொகையை நடைமுறையிலுள்ள ஒன்றிய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுடனும் (Centrally Sponsored Schemes) ஒன்றிய துறைத் திட்டங்களுடனும் (Central Sector Schemes) இணைக்காமல், தனியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மாநில நிதிக்குழு:

19) பெருந்தொற்றின் காரணமாக, ஆறாவது மாநில நிதிக் குழுவின் காலவரை இந்த அரசால் ஒன்பது மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அண்மையில் இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின்மீது, அரசு தனது நடவடிக்கை எடுத்த அறிக்கையை (Action Taken Report) விரைவில் இம்மாமன்றத்தில் தாக்கல் செய்யும்.

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடு

20) எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று தமிழ் மொழியைப் போற்றி, அதனை உலகெங்கும் பரவச் செய்வதே இந்த அரசின் தலையாய குறிக்கோளாகும். தமிழ்மொழியின் தொன்மையையும்செம்மையையும் நிலைநாட்டிட, பிற உலக மொழிகளுடன்தமிழின் மொழியியல் உறவு குறித்து அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமாகும்.தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில்,தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அகரமுதலி உருவாக்கும் சிறப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்.இத்திட்டத்திற்காக,இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

21) தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்திடவும், பகுத்தறிவைப் பரப்பிடவும், பெண்ணடிமைத்தனத்தை ஒழித்திடவும் தம் கடைசி மூச்சு இருக்கும்வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார். அவரின் சிந்தனைகளும் எழுத்துக்களும் காலத்தை வென்று இன்றும் ஒளிர்கின்றன. தனித்துவமிக்க அவரது எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்துச் சென்று, அவரது முற்போக்குச் சிந்தனையால் அனைவரையும் பயனடையச் செய்வது இந்த அரசின் கடமையாகும்.

இதனை நிறைவேற்றும் விதமாக, உரிய அறிஞர் குழுவின் பரிந்துரைகளின்படி, பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும். இப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

22) தாய்மொழி கல்வியே தலைசிறந்த கல்வி என்பது அறிவியல் கூறும் உண்மையாகும். தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாடநூல், நோட்டுப்புத்தகம் போன்ற நலத்திட்ட உதவிகள், அரசு நிதியுதவியின்றிச் செயல்பட்டு வரும், தமிழ்வழியில் மட்டும் பாடங்களைக் கற்பிக்கும் பள்ளிகளில் இலவசமாக 1 முதல் 10 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

23) மாநிலத் தொல்லியல் துறை கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளுடன் திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய மூன்று இடங்கள் உட்பட ஏழு இடங்களில் நடப்பாண்டில் அகழாய்வுகளை மேற்கொள்கின்றது. மேலும், புதிய கற்கால இடங்களைத் தேடி 5 மாவட்டங்களில் கள ஆய்வும் (exploration), பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் இடங்களைத் தேடிக் கள ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.

24) இடைச் சங்க கால பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கிய கொற்கையில் ஆழ்கடலாய்வு மேற்கொள்வதற்கு உகந்த இடத்தினை கண்டறிவதற்கு இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில் நுட்பக் கழகத்துடன் இணைந்து இந்த ஆண்டு முன்கள ஆய்வு (reconnaissance) மேற்கொள்ளப்பட உள்ளது. ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள், இரண்டு இடங்களில் கள ஆய்வு மற்றும் கொற்கையில் முன்கள ஆய்வுப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

25) பொதுமக்கள், குறிப்பாக மாணவர்களிடையே தமிழ் தொல்லியல் மரபு குறித்து ஆர்வத்தை ஏற்படுத்திடவும், நமது மாநிலத்தில் கிடைத்துள்ள அரும்பொருட்களைப் பேணிப் பாதுகாக்கவும், அருங்காட்சியகங்களும்,அகழ்வைப்பகங்களும் (on-site museums) மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாண்டு,விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் அகழ்வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள தொல்பழங்கால அகழ்வைப்பகம், தர்மபுரியில் உள்ள நடுகற்கள் அகழ்வைப்பகம் ஆகியவை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

26) மாநிலத்தில் உள்ள பழமையான பொதுக் கட்டடங்களைஅவற்றின் தனித்துவம்மாறாமல் புனரமைத்து, பாதுகாக்கும்பொருட்டுஇக்கட்டடங்களைச் சீரமைப்பதற்கு இவ்வாண்டுசிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

27) இம்மதிப்பீடுகளில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு 82.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை

28) அரசு நிலங்களில் நிலஅளவைப் பணிகள் துல்லியமாகவும்எளிதாகவும் மேற்கொள்ள, “தொடர்ந்து இயங்கும் தொடர்பு நிலையங்களின் (Continuously Operating Reference Stations)அமைப்பு”வலுப்படுத்தப்படும்.நவீன முறையில் நிலஅளவைப் பணிகளைமேற்கொள்ள நிலஅளவையர்களுக்கு“ரோவர்” (Rover Machine) கருவிகள்வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 15 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

29) பரவலான சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் அரசு நிலங்களின் பயன்பாடு அமைவது அவசியம். அரசு நிலங்களின் குத்தகை முறையில் தற்போது உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், அரசு நிலங்களை நியாயமான, வெளிப்படையான முறையில் குத்தகைக்கு விடுவதற்கும்ஒரு விரிவான நிலக்குத்தகைக் கொள்கை வகுக்கப்படும்.

30) நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களை மீட்டெடுக்கவும், பாதுகாப்பதற்கும் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. அரசு நிலங்களைப்பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும், சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

31) சென்னை பெருநகரப் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு,தக்க பரிந்துரைகளை வழங்க ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவின் பரிந்துரைகளின்படி, வெள்ளத்தடுப்புப் பணிகள் முதற்கட்டமாக 1,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இப்பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

32) வானிலையைத் துல்லியமாகக் கணிக்க,“பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை”மேம்படுத்துவதன் அவசியத்தை,அண்மையில் சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நமக்கு உணர்த்தியுள்ளது. பேரிடர் தாக்கும் முன், உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் (super computers)உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர் கட்டமைப்பை அரசு உருவாக்கும். இப்பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

33) சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ளோரின் நலனிற்காக அரசால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக 4,816 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

34) இம்மதிப்பீடுகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 7,474.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவல்

35) சட்டம்ஒழுங்கைத்திறம்பட நிலை நாட்டுவதன்வாயிலாக தமிழ்நாடு ஓர் அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானகுற்றங்கள், போதைப்பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றைத் தடுப்பதற்கு இந்த அரசுதீவிரமுயற்சிகள்எடுத்து வருகின்றது. வளர்ந்து வரும் புறநகர்ப்பகுதிகளில் காவல்துறை திறம்படச் செயலாற்றிட, சென்னைகாவல் ஆணையரகம் மூன்றாகப்பிரிக்கப்பட்டு ஆவடியிலும், தாம்பரத்திலும் இரண்டு புதிய ஆணையரகங்கள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. மேலும், இத்துறைக்குத் தேவைப்படும் அனைத்துக் கட்டமைப்புகளும்ஏற்படுத்தப்படும்.

இந்த வகையில், சமூக ஊடகங்களில் செய்யப்படும், தவறானபிரச்சாரங்களின் விளைவாக, அதிகரித்து வரும் குற்றச்செயல்களைத்தடுத்திட, “சமூகஊடகசிறப்புமையம்” அமைக்கப்படும்.

36) இம்மதிப்பீடுகளில் காவல்துறைக்கு 10,285.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தீயணைப்புமற்றும்மீட்புப் பணிகள்துறை

37) தீவிபத்துகளைத் தவிர்ப்பதை இலக்காகக்கொண்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை நவீன மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசுமேற்கொண்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டில், இத்துறை மொத்தமாக 16,809 தீ விபத்து அழைப்புகள் மற்றும் 57,451 மீட்புப்பணி அழைப்புகளை ஏற்று, எண்ணற்ற மனித உயிர்களையும், கால்நடை மற்றும் உடைமைகளையும்காப்பாற்றியுள்ளது.

38) இம்மதிப்பீட்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக 496.52 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நிதி நிர்வாகம்

39) வழக்குகளை விரைந்து முடித்து, தாமதமின்றி தீர்ப்புகளை வழங்கிட, நீதித்துறைக்கு அனைத்து ஆதரவையும் இந்த அரசு வழங்குகின்றது. வணிக வழக்குகளை விசாரிப்பதற்கென ஏழு வணிக நீதிமன்றங்கள் அமைத்திட, இந்த நிதியாண்டில் ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது.

40) இம்மதிப்பீட்டில் நீதிநிருவாகத் துறைக்கென 1,461.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

41) பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக 600 கோடி ரூபாயும் எனஇம்மதிப்பீட்டில் மொத்தம்

4,131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

42) இந்த நிதியாண்டில், இதுவரை 14,15,916 விவசாயிகளுக்கு 9,773 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 10,76,096

குறு, சிறு விவசாயிகளுக்கு 7,428 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களும் அடங்கும்.

43) நாட்டிலேயே முதல்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்த வரவு-செலவுத் திட்டத்தில் உணவு மானியமாக 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

44) இம்மதிப்பீட்டில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 13,176.34 கோடிரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

பாசனம்

45) நடப்பாண்டில்,கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலைகளையும் நீர் வழித்தடங்களையும் மறுசீரமைத்தல், தடுப்பணைகள், கதவணைகள், தரைகீழ் தடுப்பணைகள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, இம்மதிப்பீடுகளில் 2,787 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

46) நீர்வளங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், சிறப்பாக மேலாண்மை செய்வதற்காகவும்,பாசனத்திற்காக நீரை தங்குதடையின்றி வழங்குவதற்காகவும், 3,384 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள பாசன அமைப்புகளில் நீட்டித்தல், புனரமைத்தல், நவீனமயமாக்குதல் போன்ற பணிகள் (ERM)விரைவில்தொடங்கப்பட உள்ளன.

47) சாத்தனூர், சோலையார், மேட்டூர், பாபநாசம் உள்ளிட்ட 64 பெரிய அணைகளை புனரமைக்கவும், அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனைமேம்படுத்தவும் இரண்டாம் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு (DRIP-II) திட்டத்திற்கு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.உலகவங்கி மற்றும் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 1,064 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக, இம்மதிப்பீடுகளில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

48) வரும் குறுவை சாகுபடிக்கு கடைமடைப்பகுதிகள் வரை காவிரி நீர் சென்றடைய, டெல்டா பகுதியிலுள்ள 10 மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் செலவில் 4,964கிலோமீட்டர்நீளமுள்ளகால்வாய்களைதூர்வாரும்சிறப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்புதலை இந்த அரசு அளித்துள்ளது. இவ்வாண்டு முன்கூட்டியே திட்டமிடுதல் மூலம், பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னரே இந்தப் பணிகள் துரிதமாக நிறைவேற்றப்படும்.

49) இம்மதிப்பீடுகளில் நீர்வளத் துறைக்கு 7,338.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடைப் பராமரிப்பு

50) “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலார் அவர்களின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவில்லாத கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப்பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில்தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

51) இம்மதிப்பீடுகளில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு 1,314.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்மற்றும் வனம்.

52) தாவரவியல் பூங்காக்கள், பல்லுயிரினங்களின் இருப்பிடங்களாகவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு மையங்களாகவும் திகழ்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, லண்டன் க்யூபூங்கா (Kew Gardens) அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும்.

53) காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடவும், “தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை” அரசு உருவாக்கும். இந்நிதியத்தின் மூலம், வளர்ச்சி நிதி நிறுவனங்கள், பன்னாட்டு காலநிலை மாற்ற நிதியங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களிலிருந்து நிதி திரட்டப்படும்.

54) தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாத்தல், அவற்றின் வாழ்விடத்தை விரிவுபடுத்துதல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் “வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை” அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்கு,முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

55) இளம் வயதிலிருந்தே வனம் மற்றும் வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில்அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டில் தயாரிக்கப்படும்.

56) வனப் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல், வன மேலாண்மையில் பழங்குடியினரை ஈடுபடுத்துதல், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வனத்துறையில் திறன் மேம்பாடு குறித்த கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை அரசிற்குப் பரிந்துரைக்க வன ஆணையம் ஒன்றை அரசு அமைக்கும்.

57) அணிநிழல் காடுகளும், எழில்மிகு சூழல் சுற்றுலா தலங்களும் நிறைந்தது தமிழ்நாடு. வனங்களுக்குப் பாதகமின்றி சுற்றுச்சூழல் சுற்றுலாவை (Eco-Tourism) ஊக்குவிப்பது அரசின் கொள்கையாகும். இதன் அடிப்படையில், சேத்துமடை (கோயம்புத்தூர் மாவட்டம்), மணவணூர் மற்றும் தடியன் குடிசை (திண்டுக்கல் மாவட்டம்), ஏலகிரி (திருப்பத்தூர் மாவட்டம்) ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாக தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். தங்கும் இடங்கள், வனங்களைப் பற்றிய விழிப்புணர்வு மையங்கள் போன்ற பல வசதிகள் இத்தலங்களில் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் வரும் வருவாய் அப்பகுதியின் வளர்ச்சிக்காகச் செலவிடப்படும்.

58) இம்மதிப்பீடுகளில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைக்கு 849.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை

59) கடந்த இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் “இல்லம் தேடிக் கல்வி” என்ற சிறப்பான முன்னோடிக் கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 1.8 இலட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டம் நமதுநாட்டிற்கே ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் வாயிலாக 30 இலட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்றால் பெருமளவில் கல்வி கற்றலில் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இத்திட்டம்வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

60) அரசுப் பள்ளி மாணவர்கள், புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் STEAM – அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து, கல்வி பெற உதவும் நோக்கோடு, கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில்முன்மாதிரிப் பள்ளிகளை இந்த அரசு தொடங்கியுள்ளது. வரும் நிதியாண்டில்,மேலும் 15 மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரிப்பள்ளிகள் (Model Schools) தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

61) அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளை (ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட) நவீனமயமாக்குவதற்கான ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில்,அரசுப் பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப,தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் (smart classrooms), இதரப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இத்திட்டங்கள் படிப்படியாக 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் 1,300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

62) மாநிலத்தில் இயங்கி வரும் பொது நூலகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து, மேம்படுத்தத் தேவையான ஆலோசனைகள் வழங்க ஓர் உயர்மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன் கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள் அரசால் ஏற்படுத்தப்படும். இந்நூலகக் கட்டடங்களுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்.

63) சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சிகள் நடத்தப்படும். இத்துடன் இலக்கியச் செழுமை மிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். புத்தகக்காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் வரும் ஆண்டில் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

64) இம்மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.