தமிழ்நாட்டு இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் படைத்தவர்கள் – மு.க. ஸ்டாலின்

0
141

தமிழ்நாட்டு இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் படைத்தவர்கள் – மு.க. ஸ்டாலின்

சென்னை, தமிழ்நாடு அரசு – எல்காட் நிறுவனம், தொழில் கூட்டமைப்பு நடத்தும் தொழில்நுட்ப கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை கிண்டியில் நட்சத்திர விடுதியில் ’கனெக்ட் 2021’ என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்,

இந்த மாநாட்டை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பில் நடைபெறும் இந்த 2 நாள் மாநாட்டை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட இதில் கருத்துக்களை வழங்க உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த 2 நாள் கண்காட்சியில் பங்கெடுத்துள்ளனர்.

1996-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம் என்பது அரும்பாக வளர்ந்த காலத்தேலே கருணாநிதி தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தார். அப்போது நான் சென்னை மாநகர மேயராக செயல்பட்டு வந்தேன். தொழில்நுட்பத்தை திமுக ஆட்சியின் மிக முக்கிய குறிக்கோளாக மாற்றி 1996-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப புரட்சியை செய்தவர் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி.

தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஏராளமாக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நாடிவந்து தேர்வு செய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை மாற்றிக்காட்டிய ஆட்சி திமுக ஆட்சி.

தகவல் தொழில்நுட்பத்திற்காக தனித்துறையை 1998 -ம் ஆண்டு உருவாக்கியது திமுக ஆட்சி. கருணாநிதி தலைமையில் ஐடி செயல்பாட்டு துறை அமைக்கப்பட்டது. அந்த துறையை கருணாநிதி கணினிமயமாக்கினார். பள்ளிக்கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்தார். இந்த சாதனைகளுக்கான சாட்சி சென்னை தரமணியில் கம்பீரமாக காட்சியளிக்கும் டைடில் பார்க். இன்று இத்தகைய நிகழ்ச்சி நடத்துவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் அடித்தளம் அமைத்தது திமுக ஆட்சி தான்.

கணினி அறிவியலும், தகவல் தொழில்நுட்பமும் இல்லாமல் எதுவும் இல்லை. ஒரு மாநிலத்திற்கு மிகப்பெரிய முன்னேற்றங்களையும், முதலீடுகளையும் கொண்டு வருவதில் தகவல் தொழில்நுட்பத்துறை முன்னணி வகிக்கிறது.

தேவை, தொலைநோக்கு பார்வை அதன் மூலம் வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகரிப்பதே இந்த மாநாடு அமைய வேண்டும். இந்த துறையில் புதிய முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு, பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் புதிதாக மாற வேண்டும், புதிய திறன் உருவாக வேண்டும். அதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள மனித வளத்தை அறிவு சக்தியாக பயன்படுத்திக்கொள்ளத்தக்கவாறு உங்கள் நிறுவனங்களை வடிவமைக்க வேண்டும்.

படித்தவர்கள், பட்டம்பெற்றவர்கள் மட்டுமின்றி, அறிவாளிகளும், திறமைசாலிகளுமே இதற்கு தேவை. அத்தகைய திறமைசாலி கூர்மையான அறிவுத்திறன் படைத்த இளைஞர்களாக தமிழ்நாட்டு இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு கூடுதலான திறன் பயிற்சிகள் கொடுத்து அவர்களை உங்கள் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உலக அளவில் கவனத்தை ஈர்க்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு.இந்தியாவின் மொத்த எலக்ட்ரானிக் உற்பத்தியில் 16 விழுக்காடு தமிழ்நாட்டை சேர்ந்தது’ என்றார்.