தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி

0
164

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்குச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழச்சியில் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள ஆர்.என்.ரவிக்கு, தமிழ்நாடு அரசின் ‘கீழடி’ புத்தகம் மற்றும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா அவர்களின் ‘மெட்ராஸ்’ நூல்களைப் பரிசாகக் கொடுத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ”உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது; என்னால் முடிந்த அளவிற்கு உழைக்க உள்ளேன். தமிழ்நாட்டிற்குச் சேவையாற்றுவது தான் எனது முதல் பணி.

கொரோனா தொற்றை ஒழிப்பதில் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளது. ஆளுநர் பதவி அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது” என தெரிவித்துள்ளார்.

புதிய ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி பிஹார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். கல்லூரி படிப்பை முடித்ததும் பத்திரிக்கையாளராக பணியாற்றிய ஆர்.என்.ரவி, அதன் பிறகு கேரளாவில் ஐ.பி.எஸ் படித்து தேர்ச்சி பெற்றார்.

அதன்பிறகு சி.பி.ஐ பணிக்கு டெல்லி அழைக்கப்பட்டார். அங்கு விரைவிலேயே உளவுத் துறையான இன்டெலிஜென்ஸ் பீரோக்குச் சென்று பணியாற்றினார். பின்னர், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டுவந்த தீவிரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2021ம் ஆண்டு இன்டெலிஜென்ஸ் பீரோவின் சிறப்பு இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

2014ம் ஆண்டில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த போது, பிரதமர் மோடிக்கு நேரடியாக பழக்கமான ஆர்.என்.ரவியை உளவுத்துறைக்கான பிரதமர் அலுவலகத்தின் கூட்டுக் கமிட்டியின் தலைவராக நியமித்தனர்.

பின்னர், 2014 ஆகஸ்ட்டில், நாகாலாந்தில் தனிநாடு பிரச்னையை தீர்க்க ஒன்றிய உள்துறையையும் மீறி, பிரதமர் மோடி நேரடியாக அங்கு அவரை அனுப்பினார். அதன்படி நாகாலாந்து குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகச் சிறிது காலம் பணியாற்றினார்.

பின்னர், 2019 ஆண்டு ஆளுநராக நியமிக்கப்பட்டு நாகாலாந்துக்கு சென்றார் ஆர்.என். ரவி. தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு நெருக்கமான ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.