சென்னை KING மருத்துவமனையில் கூடுதலாக 104 O2 படுக்கைகள் அமைப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைப்பு!

0
207

சென்னை KING மருத்துவமனையில் கூடுதலாக 104 O2 படுக்கைகள் அமைப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைப்பு!

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 104 ஆக்சிஜன் செறிவூட்டி படுக்கைகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் உள்ள பணியாளர்களுக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் வழங்கிய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவமனை இயக்குநர் நாராயண சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்,

ஏற்கெனவே 300 ஆக்சிஜன் கூடிய படுக்கைகள், 350 சாதாரண படுக்கைகள் இங்கு இருந்தது. தற்போது 104 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க தீவிர பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னையை பொறுத்தவரை சித்தா மையங்களில் 6000 படுக்கைகள் காலியாக உள்ளது. மேலும் தற்போது பெரியார் திடலில் ஒரு மருத்துவமனை உருவாகி வருகிறது என அவர் தெரிவித்தார்.

சென்னையில் 21 இடங்களில் பரிசோதனை மையங்கள் உள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேரடியாக மருத்துவமனைக்கு செல்லாமல் பரிசோதனை மையங்கள் சென்று எந்த மருத்துவமனை செல்வது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் எனவும் தமிழகத்தில் உள்ள 890 மருத்துவமனைகளிலும் அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு எங்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது என பெயர் பலகை வைக்கப்பட இருக்கிறது. அதற்காக உத்தரவும் போடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதிகம் வசூலித்தால் அவை தெரிய வரும்போது அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தடுப்பூசி போடும் எண்ணிக்கை குறையவில்லை. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஆரம்பித்து விட்டது. குறிப்பாக வெளியில் செல்லும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த ஒரு வாரத்தில் 11 லட்சம் தடுப்பூசி போடப்படும் என அவர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை இருக்கிறது. மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர நடவடிக்கை எடுத்து இருக்கிறது அரசு. இதற்காக தொழில்துறை உடன் இணைந்து பணிகள் நடக்கிறது. அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.