கொரோனா இல்லாத தமிழகம் அமைப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
266

கொரோனா இல்லாத தமிழகம் அமைப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அவர் பேசுகையில், ”இது கொரோனா என்கிற பெருந்தொற்று காலமாக இருப்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே சென்றாலும் தனிமனித இடைவெளியை கடைப்பிடியுங்கள்.

தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மிக மிக அவசியமானது முகக்கவசம். இந்த முகக்கவசம் இன்று மனிதர்களுக்கு உயிர் கவசமாக மாறியுள்ளது. இந்த முகக்கவசத்தை அனைவரும் போட்டுக்கொள்ளுங்கள். முகக்கவசத்தை முழுமையாக மூக்கு, வாயை மூடியிருக்கும் அளவுக்கு போடுங்கள்.

அதேபோன்று மருத்துவர்கள் இன்னொரு முக்கியமான தகவலையும் சொல்கின்றனர். அதாவது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், மருத்துவமனைகளுக்கு, பேருந்துகளில் பயணிக்கும்போது, தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பணியாற்றும் போது இரண்டு முகக்கவசங்களை அணிந்துகொள்வது நல்லது என்று கூறுகின்றனர்.

கிருமிநாசினியால் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மிக மிக முக்கியமானது தடுப்பூசி. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளங்கள். நோய்த்தொற்றில் இருந்து நம்மை காக்கவும், மீட்கவும் இருக்கிற மிக முக்கியமான கவசம் தடுப்பூசி தான். தடுப்பூசி போடுவதை தமிழக அரசு ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது. அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்த தயக்கமும் வேண்டாம்.

முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகிய மூன்றின் மூலமாக தொற்றில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளலாம். வரும்முன் காப்போம், கொரோனா இல்லா தமிழகம் அமைப்போம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முகக்கவசம் அணியுங்கள்! கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள்! தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்! நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம்!