குளத்தில் கல்லெறிந்தவர்கள் எறியட்டும்: வைரமுத்து நீ சமுத்திரம்!- பாரதிராஜா அறிக்கை

0
236

குளத்தில் கல்லெறிந்தவர்கள் எறியட்டும்: வைரமுத்து நீ சமுத்திரம்!- பாரதிராஜா அறிக்கை

எதிர்ப்பு கிளம்பியதால் வைரமுத்துவுக்கு கொடுக்கப்படவிருந்த ஓ.என்.வி விருது மறுபரிசீலனை செய்யப்படும் என்ற அறிவிப்பையடுத்து இயக்குநர் பாரதிராஜா, “குளத்தில் கல்லெறிந்தவர்கள் எறியட்டும். வைரமுத்து நீ சமுத்திரம்” என்று கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

கேரள சகோதரர்களின் பேரன்பினால் மலையாள இலக்கிய உலகின் உயரிய விருதான ஓ.என்.வி விருது எங்கள் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவித்தது அறிந்து மகிழ்ச்சியுற்றேன். ஆனால், அரசியல் நெருக்கடியால் வைரமுத்துவுக்கு கொடுக்கப்படவிருந்த ஓ.என்.வி. விருது மறுபரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்திருப்பதில் வருத்தம் சிறிதளவும் இல்லை.

சமீபகாலமாக, எம் இனத்தின்மீதும் மொழியின் மீதும் அரசியல் காழிப்புணர்ச்சி கொண்டு எங்கிருந்தோ தனிமனித மாண்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக சில நபர்களைக்கொண்டு மதம், இனம், மொழியாக பிரிவினை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட இயலாத போரினை தொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இணைந்து முறியடிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

உலக தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரரசு என்கிற பட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே உன்னை அசைத்துப்பார்த்துவிடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும். தமிழர்களுக்கு என்று உறுதுணையாக முதல்வர், எதிர்கட்சித்தலைவர் மற்ற அரசியல் கட்சி தலைவர் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் எறியட்டும். அவர்கள் தாகம் தீரட்டும். குளம் என்பது கானல் நீர். நீ சமுத்திரம்” என்று வைரமுத்துவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.