கர்நாடகாவுக்கு தமிழகம் கடும் கண்டனம்- மேகதாதுக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்

0
98

கர்நாடகாவுக்கு தமிழகம் கடும் கண்டனம்- மேகதாதுக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்ட பாசன பகுதிகள் முழுக்க முழுக்க காவிரி நீரை நம்பியே உள்ளன. ஆனால் காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு தராமல் தடுத்து வருகிறது.

காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் காவிரி தண்ணீருக்காக கர்நாடகாவை எதிர்பார்க்க வேண்டிய நிலையில்தான் தமிழக விவசாயிகள் உள்ளனர். இந்தநிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக எல்லை அருகே மேகதாது என்ற இடத்தில் மிக பிரமாண்டமான அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கி உள்ளது. இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு மற்றும் காவிரி நடுவர்மன்றத்தின் அறிவுறுத்தல்களை மீறி கர்நாடக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக சட்டசபையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்காக தமிழக சட்டசபையில் இன்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

காவிரி நீர் விவகாரத்தில் நமது தலைவர்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்பது போல என்று முடியும் இந்த காவிரி விவகாரம் என்று எண்ணத் தோன்றுகிறது.

காவிரி நீர் விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் எந்த தீர்ப்புகளையும் மதிக்காமல் கர்நாடக அரசு முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு கால கட்டத்திலும், நாம் போராடிக்கொண்டே வந்துள்ளோம்.

1968-ல் அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோதும், அதற்காக வாதாடினார். பொதுப்பணித்துறை அமைச்சராக கலைஞர் இருந்தபோதும் காவிரி நீரை பெறுவதற்காக போராடினார். அண்ணன் எம்.ஜி.ஆர்., மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவருக்கு பிறகு ஆட்சி பொறுப்பில் இருந்த எடப்பாடியார் ஆகியோரும் காவிரி நீரை பெறுவதற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இன்று தளபதி மு.க.ஸ்டாலினும், காவிரி நீருக்காக போராட்டத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். அண்ணா காலத்தில் தொடங்கிய இந்த போராட்டம் நமது கொள்ளுப்பேரன் காலம் வரையிலும் போய்விடுமோ என்கிற கவலை எனக்கு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் கர்நாடகா தொடர்ந்து செயல்படுவதை மத்தியில் இருந்த ஆட்சியாளர்கள் (காங்கிரஸ், பா.ஜனதா) ஒரே நிலையிலேயே இருந்து வேடிக்கை பார்த்துள்ளனர்.

எனவே இனி வரும் காலங்களில் நாம் காவிரி பிரச்சினையை தீர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். 1989 முதல் இந்த பிரச்சினையை நான் பார்த்து வருகிறேன். தற்போது நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய தருணம் இது.

காவிரி பிரச்சினையில் யார் என்ன செய்தார்கள் என்று பேசிக் கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை. தமிழகத்தில் 1,000 ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலும் தண்ணீருக்காக நாம் போராடும் நிலையே உள்ளது.

இந்த காவிரி பிரச்சினையை நமது காலத்திலேயே தீர்த்து வைக்காவிட்டால் பின்னர் வரும் சமுதாயமும் நம்மை காறித்துப்பும்.

மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் இதுவரை காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் மீது அக்கறை கொள்ளாமல், மாற்றான்தாய் மனப்பான்மையுடனேயே நடந்து கொண்டுள்ளனர்.

இதுவரை தமிழகம் காவிரி நீர் விவகாரம் குறித்து கர்நாடகாவை சேர்ந்த 15 முதல்வர்கள் வரை போயுள்ளது. தற்போது கர்நாடக முதல்-அமைச்சராக உள்ள பசவராஜ் பொம்மை காவிரி விவகாரத்தில் நியாயமான முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம்.

பக்கத்து மாநிலமாக கர்நாடகம் இருப்பதால் இரு மாநில நல்லுறவையும் பேணும் வகையில் நாம் செயல்பட வேண்டும். கனத்த இதயத்தோடு தமிழக சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிராக கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை அனைத்து கட்சியினரும் ஆதரித்து நிறைவேற்றி தர வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதன் பின்னர் சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார்.

காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட நிதி ஒதுக்குவதை எவ் வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் கண்டனத்தை இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.

கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை இம்மாமன்றம் வலியுறுத்துகிறது.

காவிரி நதிநீர் பிரச்சினை ஒரு நீண்ட கால பிரச்சினையாகும். இதற்கு தீர்வாக உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பு செயலாக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சினை இரு மாநிலங்களின் உணர்வு பூர்வமான பிரச்சினை ஆகும். ஆதலால் மேகதாதுவிலோ அல்லது காவிரி படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, மற்றப்படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.

உச்சநீதிமன்றத்தின் 18.5.2018 ஆணையின்படி, அதன் 16.2.2018 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பினை செயல்படுத்த, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படாத, அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று ஆணையத்தை இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் பேசினார்கள். இறுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதன் பிறகு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.