அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நீக்கம்

0
98

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நீக்கம்

சென்னை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், திருச்செந்தூர் சென்ற சசிகலா, அங்கு ரெயில் நிலையம் எதிரில் உள்ள விடுதியில் தங்கினார்.

அப்போது அதே விடுதிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவும் வந்தார். அவர், சசிகலா தங்கியிருந்த அறைக்கு எதிரே உள்ள அறையில் தங்கினார். பின்னர் தனது அறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்து விட்டு, கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.

திருச்செந்தூரில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை சசிகலா சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.ராஜா நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஆங்காங்கே அக்கட்சி நிர்வாகிகளால் எழுப்பப்பட்டு வரும் நிலையில், நேற்று ஓ.ராஜா சசிகலாவை சந்தித்துப் பேசியது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சூழலில் தான், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வத்தின் உடன் பிறந்த சகோதரரான ஓ. ராஜா அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.