6 டன் பாறையை குடைந்து வடிவமைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உருவம்

0
140

6 டன் பாறையை குடைந்து வடிவமைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உருவம்

புதுச்சேரி: பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 2020-ல் காலமானார்.

அப்போது அவருக்கு வயது 74. உலகெங்கும் வாழும் இசை ரசிகர்கள் பலரும் அவரின் குரலுக்கு ரசிகர்கள்.

அவரது உடல் காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரிலுள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு இல்லத்தை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் அமைத்து வருகிறார்.

ஓராண்டாக நடக்கும் இப்பணி நிறைவடைய உள்ளது. இங்கு அமையும் சிலைகள் புதுவையை அடுத்த ஆரோவில் சஞ்சீவி நகர் பகுதியில் சிற்பக்கூடத்தில் உருவாகியுள்ளன.

இதுபற்றி சிற்பக்கூடத்தினர் கூறுகையில், ‘தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவு இல்லத்தில் ஓராண்டாக பணி நடந்து வருகிறது.

அங்கு ஏராளமான சிலைகள் வடிவமைத்துள்ளோம். அங்கு பாறையை குடைந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் முகத்தை வடிவமைக்க திட்டமிட்டோம். அதற்காக 6 டன் எடை கொண்ட பாறை திருவக்கரையில் பெறப்பட்டது.

6 மாதங்களாக இதற்காக பணி நடந்து வருகிறது. அவரது அழகிய உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உருவத்தின் அருகில் அவரது கையெழுத்து, அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரம் ஆகியவற்றை வடிவமைத்துள்ளோம்.

சிற்பி கருணாகரன் குமார் இதற்கான வடிவமைப்பை செய்து அவர் தலைமையில் 6 சிற்பிகள் இதை வடிவமைத்தோம். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் முகத்தின் கீழே அவர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையான ‘சர்வே ஜனாஸ்ஸு, ஜனா பவந்து, ஸர்வேசு ஜனா சுகினோ பவன்’ என்ற மந்திரத்தையும் எழுதியுள்ளோம்.

இப்பணிகள் முடிவடைந்து பாறை தாமரைப்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இதை பொருத்தும் பணிகள் நடக்க உள்ளது’ என்றனர்.