ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் “குருதி ஆட்டம்” இறுதி கட்ட பணிகளில்!

0
211

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் “குருதி ஆட்டம்” இறுதி கட்ட பணிகளில்!

2000 ஆம் ஆண்டு முதல், இருபது ஆண்டுகளாக ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் திரு T. முருகானந்தம் அவர்களின் இந்த திரைப்பயணம் பெரும் வெற்றி சரித்திரம். இதுவரை தமிழ்நாடு முழுதுமாக 148 படங்களுக்கும் மேலாக விநியோகம் செய்துள்ளார் அதில் உச்ச நட்சத்திரங்கள் அஜித்குமார், விஜய், தனுஷ், மற்றும் பலரின் படங்களும் அடங்கும். இந்நிறுவனம் மூலம் முதல் முறையாக திரை உரிமையை பெற்ற ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு” திரைப்படம் பிரமிப்பு தரும் வெற்றியை பெற்று பெரும் லாபத்தை தந்தது. இந்த வெற்றி பயணம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த “ மேயாத மான்” படத்திலும் தொடர்ந்தது. 2017 தீபாவளிக்கு வெளியான “ மேயாத மான்” ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் உள்ள உச்ச நட்சத்திரத்துடன் “வீரம், விவேகம்” படத்திலும் இணைந்தது. மேலும் “ஆடை, மகாமுனி, கொலைகாரன், கோமாளி, சிந்துபாத், அசுரன், பெட்ரோமாக்ஸ் மற்றும் நான் சிரித்தால்” என பல வெற்றிபடங்களை மட்டுமல்லாது விமர்சகர்களும் பாராட்டிய பல படங்களை தொடர்ந்து தந்த 2019 ஆம் வருடம் இந்நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஆண்டாகும். ரசிகர்களின் நாடித்துடிப்பறிந்து, மிகச்சிறந்த கணிப்புதிறமையுடன் தரமான படங்களாகவும், வசூல் மழையிலும் அசத்தும் படங்களை தொடர்ந்து தந்து வரும் திரு T. முருகானந்தம் முதல் முறையாக “குருதி ஆட்டம்” படம் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில், எட்டு தோட்டாக்கள் புகழ் ஶ்ரீகணேஷ் இயக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகள் மிக சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து இயக்குநர் ஶ்ரீகணேஷ் கூறியதாவது….

தயாரிப்பாளர் T. முருகானந்தம் அவர்களுடனான எனது இந்த திரைப்பயணம், கற்பனைக்கும் அப்பாற்பட்டது. எங்கள் உறவு மிகவும் உணர்வுப்பூர்வமானது. எங்கள் உறவு ஒவ்வொரு முறையும் பலமானதாக நேர்மறை வழியில் உறுதிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. படத்தின் துவக்கதில் “குருதி ஆட்டம்” திரைக்கதை மீதும், என் மீதும் அவர் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையை நான் என்றும் மறக்க மாட்டேன். அவரிடம் நான் திரைக்கதை சொல்ல, செல்லுமுன்னரே என் மீது மிகுந்த மதிப்பும், நம்பிக்கையும் கொண்டிருந்தார் அவர். 8 தோட்டாக்கள் பார்த்த பிறகு எனக்கு இப்படத்தை இயக்கும் வாய்ப்பை தந்தார். ஆனால் ஒரு தயாரிப்பாளராக எந்த ஒரு சிறு விசயத்திலும் தலையிடாமல், படைப்பில் எனக்கு முழு சுதந்திரம் தந்தார். இது எனக்கு பெரும் பொறுப்புணர்வை தந்தது. நான் படத்தை மேலும் மேலும் வெகு கவனமுடன் உருவாக்க இதுவே காரணம். மேலும் நடிகர் இப்படத்தின் நாயகன் அதர்வா ஒரு மிகச்சிறந்த நடிகர். எனக்கு தொடர்ந்து உற்சாகம் தந்து, நம்பிக்கையூட்டிக் கொண்டே இருந்தார். அவர் ஒரு சகோதரர் போல தான் என்னிடம் நடந்து கொண்டார். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் படத்தின் இசை, டிரெய்லர், பட வெளியீடு குறித்த செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளிவரும்.

குருதி ஆட்டம் படத்தை தொடர்ந்து மிக முக்கியமான, தரமான படங்களையும் அடுத்தடுத்து தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் T. முருகானந்தம். YouTube Put Chutney புகழ் ராஜ் மோகன் இயக்கத்தில், குழந்தைகளை மையமாக கொண்ட, காமெடி கமர்ஷியல் படத்தை இரண்டவாது படைப்பாக தயாரித்து வருகிறார். அதனை தொடர்ந்து தமிழின் முக்கிய இயக்குநர் மிஷ்கின் அவர்கள் இயக்கத்தில், ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிப்பில் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் “பிசாசு 2” படத்தின் அறிவிப்பே கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தமிழில் சில முக்கிய படைப்புகளின் உரிமையை பெற்று விநியோகம் செய்யவுள்ளது தயாரிப்பாளர் T. முருகானந்தம் அவர்களின் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.

மாஸ்டர் பீஸ் புரடக்ஷன் நிறுவனத்திடமிருந்து கயல் ஆனந்தி, ரோகித் ஷ்ராஃப் நடிப்பில் உருவாகும் “கமலி ஃபுரம் நடுகாவேரி (kamali From Nadukaveri) படத்தின் தமிழக திரைவெளியீட்டு உரிமையை பெற்றிருக்கிறது. மேலும் ஆகாஷ் பிரபு, ஜானகி, ஐஸ்வர்யா முருகன், அருன் மற்றும் வித்யா பிள்ளை நடிக்கும் “மாயபிம்பம்” படத்தின் உரிமையையும் பெற்றுள்ளது. மேலும் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரும் வெளியீடாக ஜெயம் ரவி நடிப்பில் “பூமி” படம் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டின் ஏழு பகுதிகளில் இப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். அடுத்ததாக இருட்டறையில் முரட்டுகுத்து படப்புகழ் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் அதன் அடுத்த பாகமாக உருவாகும் “இரண்டாம் குத்து” படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.

திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளாகவும், வசூலிலும் அசத்தும் படங்களாகவும் தந்து வரும் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், தமிழ் துறையில் தற்போதைய தயாரிப்பு, விநியோக, வெளியீட்டு தளங்களில் கோலோச்சும் மிக முக்கிய நிறுவனமாக விளங்குகிறது.