முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ.10 லட்சம் நிதியுதவி!

0
167

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ.10 லட்சம் நிதியுதவி!

தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ 10 லட்சம் நிதி அளித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா 2-ம் அலை மிக தீவிரமாகியிருக்கிறது. குறிப்பாக தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, சில தினங்களாக சற்று குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கின்றேன். இப்பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து பிரபலங்களும், தொழிலதிபர்களும், பொதுமக்களும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சூரி முதலமைச்சரின் கொரோனா நிவாரணநிதிக்கு, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். அதோடு தனது மகள் வெண்ணிலா, மகன் சர்வான் ஆகியோரது சார்பில் 25,000 ரொக்கப் பணத்தையும் அளித்துள்ளார். இதனை ட்விட்டரில் தெரிவித்துள்ள உதயநிதி, சூரிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.