மிஷ்கினுக்கு கொடுத்த ரூ.1 கோடி என்ன ஆச்சு? நடிகர் ஆர்யன் ஷ்யாம் விளக்கம்!

0
101

மிஷ்கினுக்கு கொடுத்த ரூ.1 கோடி என்ன ஆச்சு? நடிகர் ஆர்யன் ஷ்யாம் விளக்கம்!

ஆர்யன் ஷ்யாம் நடித்து தயாரித்துள்ள ‘அந்த நாள்’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்ந்து இருந்தது, ஏவிஎம் நிறுவனம். அந்த நிறுவனத்தின் ஏவிஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர், ஆர்யன் ஷியாம். ஆர்யன் ஷ்யாம் தற்போது ’அந்த நாள்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்தும் மிஷ்கின் உடனான சர்ச்சைகள் குறித்தும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.’ இது சைக்கோவை விட சிறந்த படம்’.

இதுகுறித்து பேசிய அவர், “நானே கதை வசனம் எழுதி தயாரித்து நடித்துள்ள படம் ’அந்த நாள்’. இப்படம் நரபலி மற்றும் பில்லி சூனியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் சென்சார் போர்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் நரபலி, பில்லி சூனியம் தொடர்பான காட்சிகள் இருப்பதால் சான்றிதழ் தர மறுப்பு அளிப்பதாக கூறினர். நரபலி இந்திய அரசியலமைப்பால் தடை செய்யப்பட்டதால் இப்படத்திற்கு சென்சார் தர மறுத்துவிட்டனர். பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்டு நடிகை கௌதமி பார்த்துவிட்டு படத்தைப் பாராட்டியுள்ளார். பல்வேறு கட்டுகளுடன் படத்தை ஏ சான்றிதழுடன் வெளியிட அனுமதி அளித்தார்.

மேலும், மிஷ்கினின் ’சைக்கோ’ படத்தில் நான் நடிக்க வேண்டியது. பல்வேறு காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அப்படத்திற்கு நான் அளித்த ஒரு கோடி ரூபாய் பணத்தை மிஷ்கின் தற்போது திருப்பி கொடுத்துவிட்டார். மீண்டும் வாய்ப்பு இருந்தால் அவர் படத்தில் நடிப்பேன்.  ’அந்தநாள்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார்.

ஏவிஎம் நிறுவனம் பாரம்பரியமிக்கது. அதனால் நரபலி தொடர்பான இப்படம் ஏவிஎம் பெயரில் வெளியாகாது. கிரீன் மேஜிக் என்டர்டெர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் வெளியாகும். என் மனைவி அபர்ணாவிடமும் இதுகுறித்து தெரிவித்துவிட்டேன். இப்படம் நரபலி தொடர்பான படம் என்பதால் கர்ப்பிணி பெண்கள், இதயம் பலவீனமானவர்கள் இப்படத்தை தயவு செய்து பார்க்க வேண்டாம்.

’பிரமாண்ட நாயகன்’ என்ற படத்தில் பெருமாள் வேடத்தில் நடித்துள்ளேன். இதற்காக திருப்பதி தேவஸ்தானம் எனக்கு பாராட்டி கடிதம் அனுப்பியது. அதில் ’யூத் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டப்பெயர் அளித்திருந்தனர். இது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. திருப்பதி தேவஸ்தானத்திடம் பேசி என் படத்திற்கு நெருக்கடி அளித்தனர். இந்தப் பட்டத்தை எனது இரண்டு படத்திலும் நான் பயன்படுத்தவில்லை. விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கே தற்போது நெருக்கடி ஏற்படுகிறது. நான் இப்போதுதான் சினிமாத்துறைக்கு வந்துள்ளேன். ’அந்த நாள்’ திரைப்படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்’ என்றார்.