பூமி விமர்சனம்

0
175

பூமி விமர்சனம்

நாசா விஞ்ஞானியான ஜெயம் ரவி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு தன் தாயுடன் வருகிறார். அங்கே விவசாயத்தால் மக்கள் நஷ்டப்பட்டு, கடன்பட்டு மானியம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலையை பார்க்கிறார். அதனால் நாசா வேலையை உதறி தள்ளிவிட்டு விவசாயத்தை காக்க புறப்படுகிறார். இவரின் செயல்பாடுகளை நிறுத்த கார்ப்பரேட் கம்பெனி முதலாளி பல வகையில் தொல்லை கொடுக்கிறார்.இவற்றை எல்லாம் சமாளித்து விவசாயத்தில் ஜெயம் ரவி ஜெயித்து காட்டுகிறார் என்பதே படத்தின் கதை.
ஜெயம் ரவி விவசாயியாகவும், விஞ்ஞானியாகவும் தன்னால் முடிந்த வரை தேசப்பற்றையும், விவசாயத்தையும் முன்னிறுத்தி நடை, உடை, பாவனையில் எழுச்சி பொங்க நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நிதி அகர்வால் வந்து போகிறார். விவசாயி தம்பி ராமையா, அமைச்சர் ராதாரவி, கலெக்டராக ஜான் விஜய், வட்டாட்சியர் மாரிமுத்து, நண்பன் சதீஷ், அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் வில்லன் ரோனித் ராய் அனைவரும் கச்சிதம்.
டி.இமானின் இசையும், டுட்லியின் ஒளிப்பதிவும் அற்புதம்.
கார்ப்பரேட் கம்பெனி விவசாயத்தை எப்படி அழிக்கிறது என்பதை சில காட்சிகளில் விவரித்திருந்தாலும், பல காட்சிகள் யூகிக்ககூடியதாகவும், பல படங்களில் பார்த்த காட்சிகளாக நம் கண் முன்னே தெரிவதால் படத்தின் கதைக்களம் புதிதாக தெரியவில்லை. என்றாலும் விவசாயத்திற்காக போராடும் விஞ்ஞானி எப்படி தன்னம்பிக்கையால் எடுத்த காரித்தை சாதிக்கிறார் என்பதை தன்னால் முடிந்த வரை நியாயப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் லஷ்மணன்.
விவசாயத்திற்கு குரல் கொடுக்கும் பூமி.