“பணம் அதிகம் சேர்ப்போர் கொடுமையை தட்டிக் கேட்க மாட்டார்கள்… விஜய் கோடீசுவரர்” – தயாரிப்பாளர் ராஜன் பேச்சு!

0
131

“பணம் அதிகம் சேர்ப்போர் கொடுமையை தட்டிக் கேட்க மாட்டார்கள்… விஜய் கோடீசுவரர்” – ‘இரண்டாயிரம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ராஜன் பேச்சு!

ருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உயர் மதிப்பு பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ராஜன்

“மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால் சென்சார் பிரச்சனை வருவது இயல்பானதுதான்.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக சிறிய விமர்சனத்தை முன்வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சல் கொடுத்து விட்டார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தார்கள். அவர்களுடைய காரில் அழைத்துவரும்போது விஜயை என்ன என்ன செய்தார்களோ , அந்த படத்திற்கு பிறகு மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதில்லை…விஜய் பயந்து போய் விட்டார். ஏனென்றால் அவர் கோடீசுவரர். பணம் அதிகம் சேர்த்துள்ளவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மை போய்விடும். எங்களைப் போன்ற ஏழைகள்தான் எதிர்த்து நிற்போம்.

நீதிமன்றக் காட்சியில் அம்பேத்கர் படத்தை பயன்படுத்தக்கூடாது என்று தணிக்கை குழு கூறியதாக இயக்குநர் கூறினார். திருமாவளவன், சீமான் , வேல்முருகனிடம் இதுபற்றி கூறி போராட்டம் நடத்த வேண்டும். ..திரைப்படங்களில் தவறான வார்த்தைகளையே அனுமதிப்பவர்கள் திருவள்ளுவர் குறித்து படத்தில் காட்டக் கூடாது என்று கூறுவது சரியா..?

பாஜக திரைத்துறையினருக்கு எதிராக சட்டங்களை திருத்தி அக்கிரமம் செய்து வருகிறது. காயத்ரி ரகுராம் போல தெருவில் திரிந்த பலருக்கு சினிமாக்காரர்கள் என்பதாலேயே பாஜகவில் பொறுப்பு தந்தார்கள்..அது இப்போது வல்..வல் என குரைக்கிறது.

நீட் விசயத்தில் ஸ்டாலினின் நெஞ்சுரத்தை வங்கத்து சிங்கமான மம்தாவே பாராட்டுகிறார் ” என்று கூறினார்.