நடிகை மீரா மிதுன் மீது விஜய் மக்கள் இயக்கம் போலீசில் புகார்
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி குறித்து சமூகவலைதளத்தில் மீராமிதுன் அவதூறு பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
மாடலிங் உலகில் இருந்து 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலமாக நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்தார். பெரிய எண்ணிக்கையிலான படங்களில் நடிக்கவில்லை என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத இவர், சினிமாவில் வாரிசு ஆதிக்கம் பற்றி தற்போது பேசத் தொடங்கியிருக்கிறார்.
அவர் அண்மையில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்தார். அது விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதன்பிறகு நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோரையும் மீரா மிதுன் கடும் விமர்சனம் செய்தார். இதனால் கடும் கோபமடைந்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள், மீரா மிதுனை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் வழங்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரை சமூக வலைதளங்களில் தவறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உடனடியாக மீராமிதுன் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.