“திரையுலகம் செழிப்பதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் திறக்கும்“ – சிம்பு அறிக்கை
‘மாஸ்டர்’ மற்றும் ‘ஈஸ்வரன்’ ஆகிய படங்களை திரையரங்குகளில் பார்த்து, திரைத்துறைக்கு ஆதரவளிக்க வேண்டும் என நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து 14-ஆம் தேதி சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும், ‘ஈஸ்வரன்’ வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
மேலும், “ஈஸ்வரன் பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்த படம், மிக குறுகிய காலத்தில் தயாரானது திரையரங்குகளின் மீட்சிக்காக தான். அதற்காகத்தான் இந்த காலத்திலும் வெகு பிரயத்தனப்பட்டு உயிரை பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில்நுட்ப வேலைகள், டப்பிங், எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சி அல்ல. இதற்காக மெனக்கெட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து, ஒரு வருடம் ஆகியும் ‘மாஸ்டர்’ படம் திரையரங்கில் மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய மீடியாவிற்கு செய்யும் மரியாதை. அதில் எனது பங்கும் இருக்க வேண்டும் என விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளில் உருவானவர்கள், மக்கள் எங்களை திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டு இருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார்.
திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள். என் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்குகள் நிறையட்டும், கொரோனா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற்று நிற்கும் நாம், நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்த படங்கள் நிச்சயம் உதவும்.
உங்களை மகிழ்விக்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வர வேண்டும். திரை உலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன். கடைகள் மால்கள் கடற்கரையை என எல்லாமே முழுமையாக திறக்கப்பட்டு விட்டன. திரையரங்குகள் முழுமையாக திறக்கப்பட்டு விட்டால் ஒழிய, அந்த பழைய நிலை வராது. வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து தமிழ் புத்தாண்டுக்குள் 100% இருக்கை ஆக்கிரமிப்பு குறித்து உத்தரவிட்டால், மிக்க நன்றி உள்ளவர்களாக இருப்போம்” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் சிம்பு.