திரையரங்க உரிமையாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

0
341

திரையரங்க உரிமையாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

மத்திய அரசின் சார்பில் இன்று திரையரங்க உரிமையாளர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

நாடெங்கும்உள்ள திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து அவற்றின் உரிமையாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு நடத்தும் இந்த ஆலோசனை கூட்டம் காணொலி முறையில் நடைபெற உள்ளது. முதலில், வட மாநில திரையரங்குகளின் பிரதிநிதிகளுக்கு இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தென்னிந்திய திரையரங்க பிரதிநிதிகளுக்கு மட்டும் அழைப்பு எதுவும் வரவில்லை. இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தென்னிந்திய பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திரையரங்குகளை எப்போது திறப்பது என்ற முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. கொரோனா பொது முடக்கத்தால் கடந்த ஐந்தரை மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் திரைத்துறை  பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. உரிய கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும், ஒரே நாளில் 4 காட்சிகளுக்கு அனுமதி தர வேண்டும் என்றும், ஜிஎஸ்.டி வரியை குறைப்பதோடு, கேளிக்கை வரியை நீக்க மாநில அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டுமெனவும் கோர உள்ளனர்.அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி தருமாறு மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாநில அரசு விதிக்கும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வரி இருக்கும் நிலையில், கேளிக்கை வரியும் வசூலிப்பது, நசிந்து போயிருக்கும் சினிமாத் தொழிலை மேலும் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.