திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி

0
210

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி

கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் சினிமாவை மட்டுமே நம்பியிருந்தவர்களின் வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நவம்பர் 10-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது.

ஆனாலும் முன்பு போல திரையரங்கில் கூட்டத்தை காண முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக இந்த நிலை நீடித்து வந்த நிலையில், பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.

இதற்காக திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு நடிகர் விஜய் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதோடு திரைத்துறையினருக்கு மக்கள் தங்களது ஆதரவை தர வேண்டும் எனவும், வரும் தமிழ் புத்தாண்டிற்குள்ளாவது 100% இருக்கையை முதல்வர் உறுதி செய்ய வேண்டும் எனவும் நடிகர் சிம்பு இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் மாஸான பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.

தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு..