தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு

0
376

1303 வாக்காளர்களைக் கொண்ட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. தேர்தல் அப்போது 1050 வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஒரு மணிநேரத்தில் தலைவர் பதவிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ‘மெர்சல் படத்தின்’ தயாரிப்பாளர் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி.ராஜேந்தர் 378 வாக்குகளும், தேனப்பன் 87 வாக்குகளும் பெற்றனர். 18 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தலைவராக தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

துணைத்தலைவர் பதவிக்கு முரளி அணியைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் வெற்றி பெற்றார். இரண்டாவது துணைத்தலைவராக சுயேட்சையாக போட்டியிட்ட கதிரேசன் வெற்றி பெற்றார். கௌரவ செயலாளர் பதவிக்கு டி.ராஜேந்தர் அணியைச் சேர்ந்த மன்னனும் முரளி அணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர்.

கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன்

பொருளாளர் பதவிக்கு முரளி அணியைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார்.  இதனிடையே ஊடகங்களுக்கு பேட்டியளித்த முரளி விரைவில் முதல்வரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக கூறினார்.