”டாக்டர் 100 கோடி வசூல்”: என்னை நம்பி படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி: நெல்சன்

0
176

”டாக்டர் 100 கோடி வசூல்”: என்னை நம்பி படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி: நெல்சன்

ஹீரோ’ படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்து தற்போதுவரை ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள். இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடொக்‌ஷனும் கேஜேஆர் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்திருந்தனர்.

கடந்த 27 ஆம் தேதி கேரளாவிலும் டாக்டர் வெளியிடப்பட்டது. அங்கும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடி வெளியான இரண்டே நாளில் 66 லட்சம் வசூலைக் குவித்தது. இந்த நிலையில், ‘டாக்டர்’ உலகம் முழுக்க வசூலில் 100 கோடியை தாண்டியது என்று ‘டாக்டர்’ படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், ‘டாக்டர்’ படத்தின் வெற்றிக்காக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ” ‘டாக்டர் வெற்றிக்காக அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தயாரிப்பாளராக நடிகராக மற்றும் ஒரு நல்ல நண்பராக என்னை நம்பிய சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். முழு ஒத்துழைப்பை அளித்த அனிருத் மற்றும் குடும்பமாகவே இருந்த பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு, மிலிந்த் சோமன், ரெட்டின் கிங்ஸ்லி, அர்ச்சனா, இளவரசு, அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. மேலும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் கேஜேஆர் நிறுவனத்துக்கும் ரசிகர்களுக்கும் தியேட்டர் உ ரிமையாளர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி” என்று உருக்கமுடன் கூறியிருக்கிறார்.