சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கவும்: அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை

0
120

சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கவும்: அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை

அரசியல், ஜாதி, மத சார்பின்றி கல்விப்பணியில் கலங்கரை விளக்காக செயலாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை வைத்துள்ளது.

சமீபத்தில் ஓடிடியில் சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக பாமகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி சூர்யாவை விமர்சித்து வரும் வேளையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. படத்தில் இடம்பெற்ற காலண்டர் மாற்றப்பட்ட பிறகும் எதிர்ப்பு தொடர்கிறது. இதனிடையே, ஜெய்பீம் படம் குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாக் தெரிவித்து, மயிலாடுதுறையில் ஓடிக்கொண்டிருந்த சூர்யா நடித்த ‘வேல்’ திரைப்படம் பாமகவினரால் நிறுத்தப்பட்டது. அத்துடன் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ”’ஜெய் பீம்’ திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர வேண்டும்; 7 நாட்களில் ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்; அக்னி குண்ட காட்சிகளை நீக்க வேண்டும்” என சூர்யா, ஜோதிகா, 2டி நிறுவனம், இயக்குனர் ஞானவேல், அமேசான் ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தவறினால் கிரிமினல் அவதூறு வழக்கு மற்றும் இழப்பீடு கோரி உரிமையியல் வழக்குகள் தொடரப்படும் என நோட்டீசில் எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.