சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
103

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா, ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க 2’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து நடிகர் சூர்யா தற்போது இரண்டாவது முறையாக பாண்டிராஜுடன் கூட்டணி அமைத்து, உருவாகி வந்தப் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், தேவதர்ஷினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினய் ராய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணிப் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில், பிப்ரவரி மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா சூழலால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் 10-ல் வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

தமிழில் தயாராகி உள்ள இந்தப்படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். ஏற்கனவே,‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘டான்’ உள்ளிட்ட படங்கள் மார்ச்சில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.