சிம்பு – ஹன்சிகாவின் மகா ஓடிடி-யில் வெளியிட தடை கோரிய வழக்கு – மே 19-ல் பதிலளிக்க உத்தரவு!

0
239

சிம்பு – ஹன்சிகாவின் மகா ஓடிடி-யில் வெளியிட தடை கோரிய வழக்கு – மே 19-ல் பதிலளிக்க உத்தரவு!

நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முயற்சிகள் நடப்பதாகவும், படத்தை வெளியிட தடை கோரியும் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், படத்தை இயக்க தனக்கு 24 லட்சம் ரூபாய் ஊதியம் தருவதாக ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், இதுவரை 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளதால், மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் ஜமீல் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு தெரியாமல், எடுக்க வேண்டிய காட்சிகளை எடுக்காமல், தன் கதைக்கருவை வேறு சிலரை வைத்து படத்தை முடித்ததற்காக தனக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மே 19-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் உள்பட மூவர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.