சிம்பு பட பிரச்சனை – தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை

0
265

சிம்பு பட பிரச்சனை – தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஈஸ்வரன்’. கிராமத்து பின்னணி கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தை திண்டுக்கல்லைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் படமாக்கி முடித்துள்ளது படக்குழு.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் 2021-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை எனக் கூறி டி.ராஜேந்தர் ஆரம்பித்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பில் இருப்போர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, “‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்மந்தமாக பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. ‘AAA’ படத்திற்கும் ‘ஈஸ்வரன்’ பட தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இந்த கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்திரமாட்டோமா என்று அத்தனைபேரும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், தைரியமாக ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட முன்வந்திருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நம்ம வரவேற்பு கொடுக்கனும். அதை விட்டுவிட்டு அந்த தயாரிப்பாளரையும், படத்தை வாங்கிய விநியோகஸ்தரையும் போன் செய்து இந்த படம் வெளியிடனும்னா ‘AAA’ படத்திற்கு இவ்வளவு கோடி பணம் கட்டணும் என்று சொல்வது எந்தவகையிலும் நியாயம் இல்லை. அந்த தீய சக்திகளுக்கு வன்மையான கண்டனத்தை இந்த நேரத்தில் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த தயாரிப்பாளருக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பக்க பலமாக இருக்கும். ‘AAA’ படம் சம்பந்தமாக நிறைய பிரச்னைகள் இருந்தது. அதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சிம்பு அவரது சம்பளத்தை விட்டுகொடுத்துள்ளார். மீண்டும் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இரண்டு பேருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை.

‘AAA’ படத்தின் தயாரிப்பாளருக்கும், நடிகர் சிம்புவுக்கும் சரியான புரிதல் இல்லை. அதன்பிறகு சங்கம் மூலமாக பேசியும், கட்டபஞ்சாயத்து மூலமாக பேசியும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. ஆகையால் சிம்பு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இந்த பிரச்னையை நீதிமன்றத்தில் தான் பார்த்து கொள்ள வேண்டும்.அதைவிட்டு விட்டு நாங்கள் கட்ட பஞ்சாயத்து செய்து பணத்தை வாங்கி கொடுத்துவிடுவோம் என்று சொன்னால், அவர்கள் மீது nசட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆகையால் மீண்டும் ஒருமுறை எங்களது கண்டத்தை தெரிவிப்பதோடு, சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.