‘சின்ன கலைவாணர்’ நடிகர் விவேக் மறைவு, கண்ணீரில் தமிழ்நாடு: அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் இரங்கல் இரங்கல்

0
188

‘சின்ன கலைவாணர்’ நடிகர் விவேக் மறைவு, கண்ணீரில் தமிழ்நாடு: அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் இரங்கல் இரங்கல்

இவர் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல…. பகுத்தறிவு பண்பாளர்…. பெரியார் , இயற்கை வேளாண் விஞ்சாணி நம்மாழ்வார், அப்துல்கலாம் ஆகியோரின் வழியில் பயணித்தவர்…. சினிமாவில் சிரிக்க வைத்தவர் மட்டுமல்ல சிந்திக்க வைத்தவர்…. இயற்கை எழுதி இறைவனடி சேர்ந்தவர்க்கு இதய அஞ்சலி

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்றார்.

உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார்.

59 வயதாகும் விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகளையும் பரப்பினார். இதனால் அவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டினார்.

மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.

மருத்துவமனையிலிருந்து அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் விவேக்கின் மறைவையறிந்து அவரது இல்லத்தின் முன்பு ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விவேக் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இரங்கல் செய்தியில்

சமூக நலனை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர் நடிகர் விவேக், சுற்றுச்சூழல், மரம்வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் என தெரிவித்துள்ளார்.

துணை முதல் அமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பியவர் நடிகர் விவேக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர், நடிகர் விவேக் என கூறி உள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்

சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர்.

தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ !. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் திரையுலகினர் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்

தமிழ் திரையுலகில் நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவர் என்று தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் நடிகர் விவேக் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கே பேரிழப்பு என கூறி உள்ளார்.

பகுத்தறிவு கருத்துக்களை பரப்பி வந்த சின்ன கலைவாணர் விவேக் மரணம் வேதனை தருகிறது என்று சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்

தனது நகைச்சுவையால் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்றவர். பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுவைத்து இயற்கை வளங்களை பாதுகாத்தவர் விவேக் என்று கூறி உள்ளார்.

தான் பிறந்த மண் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர் நடிகர் விவேக் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறி உள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்

பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அதைத் திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர், நடிகர் விவேக் நடிப்பை தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தியவர் என கூறி உள்ளார்.

நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தலைவர் தொல். திருமாவளவன் கூறி உள்ளார்.

சமூக அக்கறையோடு பணியாற்றி நமது நெஞ்சங்களில் ‘நாயகனாக’ உயர்ந்தவர் விவேக் என ரவிக்குமார், எம்.பி கூறி உள்ளார்.

சமூக விழிப்புணர்வோடு பணியாற்றிய மகத்தான கலைஞர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என வைகைச்செல்வன் கூறி உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சின்னக்கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.

சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள், விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் விவேக்கின் இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என டைரக்டர் அட்லி கூறி உள்ளார்.

சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக்என நடிகர் ராஜேஷ் கூறி உள்ளார்.

சமூக செய்தியை தனது நகைச்சுவை நடிப்பு மூலம் இணைத்த சமகால சிறந்த நடிகர் விவேக் என இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறி உள்ளார்.

நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்லாது, சமூகத்திற்கே பேரிழப்பு என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பதிவில்,

“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க் கதாநாயகன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்திக் ஆகியோர் சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் மயில் சாமி, மனோபாலா, ஆடுகளம் நரேன் ஆகியோர் சாலிகிராமத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

திரைப்படத்தில் நடிப்பதைத் தாண்டி சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் நடிகர் விவேக் என்று நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்கின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக நடிகை கோவை சரளா இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் மறைந்துவிட்டார் என்பதை இன்னமும் நம்பமுடியவில்லை என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் இரங்கல்

அற்புதமான மனிதர், நல்ல மனிதர், தர்ம சிந்தனை உள்ளவர் நடிகர் விவேக் என்று நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.

எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார், திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் என டைரக்டர் சேரன் கூறி உள்ளார்.

சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக்கின் பிரிவு, வார்த்தைகளில் சொல்ல முடியாத துயர் என டைரக்டர் பார்த்திபன் கூறி உள்ளார்.

சீயான் விக்ரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

என் மேல் அளவற்ற அன்பு கொண்டவரும், எனது நெருங்கிய நண்பருமான மாபெரும் கலைஞன் விவேக்கின் மரண செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ் திரைப்பட உலகிற்கும் மாபெரும் இழப்பு.

அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

-சீயான் விக்ரம்.

Y Gee Mahendra வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

அருமையான நடிகர். அதைவிட அருமையான மனிதர். சமுதாய அக்கறை கொண்ட மாமனிதரை இழந்துவிட்டோம். நான் மற்றும் திரை உலகமும் பேரதிர்ச்சியில் உள்ளோம். வாழந்த காலத்தில் மக்களை மகிழ்வித்தது மட்டும் அல்லாமல் பல நல்ல கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. இருப்பினும் வாழ்க்கை எனும் நாடகத்தில் திறம்பட வாழந்த ஒரு நல்ல ஆன்மா என்பது ஆறுதல். என் அருமை நண்பா , பூலோகத்தில் ஆற்றிய சேவையை சொர்கத்திலும் தொடர்வாய் என்று நான் அறிவேன். ஆன்மா சாந்தியடையட்டும்.
Y Gee Mahendra

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இவர் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல…. பகுத்தறிவு பண்பாளர்…. பெரியார் , இயற்கை வேளாண் விஞ்சாணி நம்மாழ்வார், அப்துல்கலாம் ஆகியோரின் வழியில் பயணித்தவர்…. சினிமாவில் சிரிக்க வைத்தவர் மட்டுமல்ல சிந்திக்க வைத்தவர்…. இயற்கை எழுதி இறைவனடி சேர்ந்தவர்க்கு இதய அஞ்சலி.

“சின்னக்கலைவாணர் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட விவேக் காலமானது தமிழ் திரை உலகிற்கு பேரிழப்பாகும். அவரைப்பற்றி நல்ல விஷயங்கள் மட்டுமே வந்து கொண்டு இருந்ததே தவிர தவறான செய்தி ஒருபோதும் வந்ததில்லை.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் இதயத்தில் இடம்பிடித்த ஒப் பற்ற கலைஞன்தான் விவேக்.

கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் இராமநாராயணன் இயக்கத்தில் நிறைய நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா. கே.பாக்யராஜ், வி.சி.குகநாதன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், விசு, கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு. வி.சேகர், உதயகுமார், சுந்தர்.சி. டி.பி.கஜேந்திரன், மனோஜ்குமார்.மோகன்ராஜா, ஏ.எல்.விஜய் மட்டுமல்ல புதுமுக இயக்குனர்கள் படங்களிலும் நடித்தவர்.

ரஜினி, விஜயகாந்த். பிரபு. சத்யராஜ். முரளி, ராம்கி, பாண்டியராஜன். கார்த்திக்,விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி. தனுஷ், சிம்பு, விஷால், கவுண்டமணி, கார்த்தி, கரண், ராதாரவி.நாசர், வாகை சந்திரசேகர், எஸ்.வி.சேகர், நெப்போலியன், பிரகாஷ்ராஜ், மம்முட்டி, வடிவேல், சந்தானம், லிவிங்ஸ்டன் என அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளவர்தான் விவேக். மத்திய, மாநில அரசின் விருது பெற்றவர்.

அவரின் மறைவு ஈடு செய்ய முடியாதது
அவரது குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
விஜயமுரளி (தலைவர்)
பெருதுளசி பழனிவேல் (செயலாளர்)
B. யுவராஜ் (பொருளாளர்)
கோவிந்தராஜ் (துணைத்தலைவர்)
இராமானுஜம் (துணைத்தலைவர்)
இரா.குமரேசன் (இணைச்செயலாளர்)
M.P.ஆனந்த் (இணைச்செயலாளர்)
இப்படிக்கு
தெ.தி.ப.தொ யூனியன்

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சின்ன கலைவானர் காலமானார்!
தமிழ் சினிமாவில் சின்ன கலைவானர் என்று அழைப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு சமூக சீர்திருத்த கருத்துக்களையும் எடுத்துச்சொல்லி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் சின்ன கலைவானர் என அன்போடு அழைக்கப்பட்டவர்.
அதோடு மட்டுமல்லாமல் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அவருடைய கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள், சாலையோரங்களில் என பல்வேறு இடங்களிலும் இதுவரை 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.
சிறந்த சமூக செயல்பாட்டாளராகவும், மனிதநேயராகவும் செயல்பட்டு வந்த நடிகர் விவேக்கின் மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் மறைந்தாலும் அவர் நட்டு வைத்த லட்சக்கணக்கான மரங்களின் மூலம் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

இயக்குநர் எஸ்பி.முத்துராமன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

கலைவாணரைப்போல்,சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த,சின்னக்கலைவாணரை, இழந்துவிட்டோம்.நகைச்சுவையிலும் வள்ளல்,தொண்டு செய்வதிலும், வள்ளல்.அவர் “இறந்தும் வாழ்வார்.” அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். எஸ்பி.முத்துராமன். இயக்குநர்.