கணேசாபுரம் விமர்சனம்

0
452

கணேசாபுரம் விமர்சனம்

சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் காசிமாயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வீராங்கன் இயக்கியுள்ள திரைப்படம் கணேசாபுரம். இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாஸ் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி மற்றும் டிக்- டாக் ராஜ்பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர். வாசு ஓளிப்பதிவு செய்துள்ளார், ராஜா சாய் இசை அமைத்துள்ளார்.

மதுரை மண்ணின் மையமாகக் கொண்ட இத்திரைப்படம் 90- காலகட்டத்தில் நடைபெறுவதைப் போல் பயணிக்கிறது. கணேசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னா, ராஜ் பிரியன் மற்றும் காசிமாயன் மூவரும் முரட்டுத்தனமாக சுற்றித்திரியும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் மூவரும் பல ஊர்களை சேர்ந்த திருட்டு கும்பல்களை வளர்க்கும் ஜமீனின் கட்டுப்பாட்டில் திருட்டு தொழில் செய்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் பஞ்சாயத்தின் போது, ஊர் தலைவர் கயல் பெரேராவை சின்னா அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் பெரேராவின் மகன் ராஜசிம்மன், சின்னா மற்றும் நண்பர்கள் அனைவரையும் கொல்ல முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நாயகி ரிஷாவை சின்னா காதலிக்க தொடங்கியவுடன் காதல் அவர்களுடைய வாழ்வில் பல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நண்பர்களான ராஜ் பிரியன் , காசிமாயன் ஆகிய இருவரும் சின்னாவின் காதலுக்கு இடையூறு ஏற்பாடாமல் இருக்க திட்டம் தீட்டுகின்றனர். இந்த திட்டம் வெற்றி பெற்றதா? இந்த மாற்றம் மூவரின் வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டது? ராஜசிம்மன், சின்னா மற்றும் நண்பர்களை கொலை செய்தாரா? என்பது தான் ‘கணேசாபுரம்’ படத்தின் மீதி கதை.

ஹீரோவாக நடித்திருக்கும் சின்னாவுக்கு இது தான் முதல் படம் என்றாலும், முரட்டுத்தனமாக பார்வையுடன் நடை, உடை, பாவனையிலும் அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ரிஷா ஹரிதாஸ் சாதாரண கிராமத்து பெண்ணாக நக்கல் நெய்யாண்டி பேச்சாலும், சின்னாவின் காதலியாக வரும் போது அளவான ஆனால் ஆழமான அழுத்தமான நடிப்பால் மனதை ஈர்க்கிறார்.

ஹீரோவின் நண்பராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் காசிமாயனும் மற்றொரு நண்பராக நடித்திருக்கும் ராஜ்பிரியனும் நடிப்பால் கவனிக்க வைப்பதோடு முக்கிய கதாபத்திரத்தில் ஜொலிக்கின்றனர்.

வில்லன்களாக நடித்திருக்கும் ராஜசிம்மன், பசுபதி ராஜ், கயல் பெரரா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கிராமத்து முரட்டு வேடங்களுக்கு ஏற்ப நடித்து கதைக்குப் பாலமாக திகழ்கின்றனர்.

ராஜா சாயின் இசையில் பாடல்கள் அனைத்தும் கிராமத்து மண்வாசனையோடு கேட்கலாம், பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு உதவுகிறது.

பி.வாசுவின் ஒளிப்பதிவு அருமை.திருடும் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும், துரத்தும் காட்சிகளிலும் பங்களிப்பு சிறப்பாக உள்ளது.

வீரம், காதல், நட்பு என்று ஒரு ஜனரஞ்சகமான கதைக்களத்தை மையமாக வைத்து திருட்டு தொழிலையும் இணைத்து நண்பர்களின் ஒற்றுமையை காண்பித்து இறுதியில் பகையா? காதலா? என்ற மனதை நெருட செய்யும் யதார்த்தமான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் வீராங்கன்.கே.

மொத்தத்தில் சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் காசிமாயன் தயாரிப்பில் ஸ்டாண்டர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட்ட சிறு பட்ஜெட்டில் ஒரு கிராமத்து காதல் கதை கணேசாபுரம் – விறுவிறுப்பு.