ஓணான் திரை விமர்சனம்: ஒனான் ஒரு பசுந்தோல் போர்த்திய பச்சோந்தி

0
203

ஓணான் திரை விமர்சனம்: ஒனான் ஒரு பசுந்தோல் போர்த்திய பச்சோந்தி

எலிஃபண்ட் ப்ளை எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பி.ஆர்.ரஞ்சித்குமார் தயாரிப்பில் ஓணான் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சென்னன்.
இதில் திருமுருகன் சதாசிவன், ஷில்பா மஞ்சுநாத், காளிவெங்கட், சிங்கம்புலி, சரவணன் சக்தி, சனுஜா சோமந்த், ராஜேஷ்வரி, பூ ராமு, ஷர்மிளா, மாஸ்டர் ஜுபின், பேபி வேதா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு-ராஜேஷ்ராமன், இசை-ஆண்டனி அபிரகாம், எடிட்டிங்-இப்ரூ, கலை-சஜித், பாடல் வரிகள்-தனிக்கொடி வி.ராமசாமி, பாடியவர்கள்-கே.எஸ்.சித்ரா, ஸ்வேதா மோகன், சரத், தயாரிப்பு மேற்பார்வை-மன்சூர் வெட்டத்தூர், குட்டி கிருஷ்ணன், ஒப்பனை-ராய் பள்ளிசேரி, உடை-சுகேஷ் தனூர், பிஆர்ஒ-புவன்.

திருமுருகன் சதாசிவன் பாபநாசத்திற்கு விலாசம் தேடி வருகிறார். அங்கே பூராமிடம் மருமகன் சரவணன் சக்தி  தகராறு செய்து கொண்டிருக்க, அவரை அடித்து விரட்டிவிடுகிறார் திருமுருகன். பூராமு தன் வீட்டிற்கே அழைத்து வந்து திருமுருகனை தங்க வைத்துக் கொள்கிறார். மகள் ஷில்பா கணவன் சரவணன் சக்தியின் சந்தேகத் குணத்தால் அவரை விட்டு பிரிந்து தந்தையுடன் வசிப்பதால் மீண்டும் சரவணன் சக்தி வீட்டிற்கே வந்து தகராறு செய்ய அப்பொழுதும் திருமுருகன்  அவரையும், அவரது அண்ணன்களையும் அடித்து விரட்டி விடுகிறார். இதனால் திருமுருகனின் நடவடிக்கை ஷில்பாவிற்கு பிடித்து போக, தந்தை பூராமும் ஷில்பாவை திருமுருகனுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இந்த திருமணத்திற்கு ஷில்பாவின் அண்ணன் காளிவெங்கட் வெளிநாட்டிலிருந்து வருகிறார். திருமணமும் நடந்து முடிகிறது.  அன்று தான் காளி வெங்கட்டிற்கு திருமுருகன் சைக்கோ கொலையாளி என்பது தெரிகிறது. இதனால் அதிர்ச்சியாகும் காளி வெங்கட் தனது குடும்பத்தையும், தங்கை ஷில்பாவையும் திருமுருகனிடமிருந்து காப்பாற்ற மனநோயாளியாக நடிக்கிறார். காளிவெங்கட்டிற்கு குணம் ஆகவேண்டுமானால் பாம்பு மலைக்கு சென்று வரவேண்டும் என்று ஜோசியர் சொல்ல, திருமுருகனும்,காளி வெங்கட் இருவரும் மலைக்கு செல்கிறார்கள். அங்கே இருவரில் யார் ஒருவர் உயிரோடு திரும்பி வருகிறார்கள்? உண்மையில் யார் கொலையாளி? திருமுருகன் ஏன் சைக்கோ கொலையாளியாக சித்தரிக்கப்பட்டார்? திருமுருகன் பாபசாசத்திற்கு ஏன் வந்தார்? என்பதே படத்தின் க்ளைமேகஸ்.

திருமுருகன் சதாசிவன் பரட்டை தலை, வெறித்து முறைக்கும் கண்கள், திடாகத்திர உடம்பு என்று முதலில் காட்சிகளில் சைக்கோ வில்லனாக சித்தரிக்கபட்டு, அனைவரையும் பேசாமலேயே பயமுறுத்தும் நடை, உடை, பாவனையில் மிரட்டி, பின்னர் கதை நகரும் போது அவருடைய கதாபாத்திரம் பேச ஆரம்பிக்கும் போது நல்லவனாகவும், எதற்காக பாபநாசத்திற்கு வந்தார் என்பதை இறுதியில் எடுத்துச் சொல்லும் விதம் எதிர்பார்க்காத ஒன்று.தன்னுடைய இயல்பான நடிப்பில் இரண்டு கோணங்களில் அச்சு அசலாக வாழ்ந்திருக்கிறார்.

ஷில்பா மஞ்சுநாத் முதல் கணவனின் நடவடிக்கை பிடிக்காததால் மனஉளைச்சலில் தவிப்பது, பின்னர் இரண்டாவதாக திருமுருகனை திருமணம் செய்து கொள்வது, அண்ணன் மனநோயாளியாக இருப்பதை பார்த்து தவிப்பது என்று அளவான நடிப்பை கொடுத்துள்ளார்.

திருமுருகனின் முதல் மனைவியாக நர்சாக வரும் சனுஜா சோமந்த் திருமுருகன் மனநோயாளியாக இருக்க, அவரை அன்பால் மனநோயை தீர்த்து, அவரையே திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ, எதிர்பாராத விதமாக இறக்கும் தருணத்தில் பரிதாபப்பட வைக்கிறார்.

காளிவெங்கட்டை நண்பராக, காமெடியனாக பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்தப்படத்தில் கதாபாத்திரத்தை வித்தியாசப்படுத்தி நல்லவனாக காட்டி பின்னர் கெட்டவனாக மாறும் தருணம் வில்லனாக அதகளம் பண்ணுகிறார். முதல் காட்சியில் கேள்விக்குறியாக தொடங்கும் கதை, முடிவில் இவரால் முற்றுப்புள்ளியாக முடிகிறது.

சிங்கம்புலி, சரவணன் சக்தி, ராஜேஷ்வரி, பூ ராமு, ஷர்மிளா, மாஸ்டர் ஜுபின், பேபி வேதா ஆகியோர் கதைக்களத்திற்கேற்ற கதாபாத்திரங்களாக வந்து போகின்றனர்.

ராஜேஷ்ராமன் முதல் காட்சியில் தொடங்கும் பரபரப்பை இறுதி வரை தன் காட்சிக்கோணங்களால் தோய்வில்லாமல் நகர்த்த உதவுகிறார்.

தனிக்கொடி வி.ராமசாமி பாடல் வரிகளில் ஆண்டனி அபிரகாமின் இசை கச்சிதம்.

எடிட்டிங்-இப்ரூ, கலை-சஜித் சிறப்பாக உள்ளது.

கொலையாளி ஆரம்ப காட்சியில் கைது செய்யுமாறு போலீஸ் நிலையத்திற்குள் நுழைய அதன் பின் விரியும் ஃபிளாஷ்பேக்குடன் திரைக்கதையமைத்திருக்கிறார் இயக்குனர் சென்னன். முதல் பாதி திருமுருகனை சைக்கோவாக சித்திரிக்க, இரண்டாம் பாதி காளி வெங்கட் கதாபாத்திரம் செக்ஸ் டார்ச்சர் செய்யும் பேர்வழியாக சித்தரிக்கப்பட, அதன் பின் தான் கதையின் விறுவிறுப்பு கூடி இறுதிக்காட்சியில் யார் கொலையாளி என்பதை வித்தியாசமான கோணத்தில் கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் சென்னன். சில இடங்களில் திருமுருகனின் முடி கெட்டப் தான் சொதப்பி விடுகிறது. மற்றபடி சிறிய படத்தை பட்ஜெட்கேற்றவாறு முடிந்தவரை சிறப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் சென்னன்.

மொத்தத்தில் எலிஃபண்ட் ப்ளை எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பி.ஆர்.ரஞ்சித்குமார் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ஓணான் ஒரு பசுந்தோல் போர்த்திய பச்சோந்தி.