இன்று முதல் திரையரங்கு திறப்பு

0
149

இன்று முதல் திரையரங்கு திறப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டது திரைப்பட உலகம். முதல் அலையின்போது கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. அதுவும் 50 சதவிகித இருக்கை அனுமதியுடன். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதித்திருந்த நிலையில், கொரோனா 2வது அலை பரவியதால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டது. தற்போது 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி 50 சதவிகித இருக்கைகளுடன் இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது: தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும். திறப்பு அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் தியேட்டர் ஊழியர்களுக்கு தடுப்பூசிபோடும் பணியை முன்பே தொடங்கி விட்டோம்.
இதுவரை 90 சதவிகித ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள். ‘‘நான் தடுப்பூசி போட்டுவிட்டேன்” என்கிற பனியன் அணிந்துதான் பணி செய்வார்கள். அதோடு தியேட்டர் ஊழியர்களுக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனையும் செய்யப்படும்.

படம் பார்க்க வரும் ரசிகர்கள் பயன்படுத்தும் விதமாக ஒவ்வொரு வகுப்பு நுழைவு வாயிலும் சானிடைசர் வைக்கப்படும். ஒவ்ெவாரு காட்சியின் இடைவெளியிலும் தியேட்டர் முழுக்க  சானிடைசர் தெளிக்கப்படும். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்படும், கழிப்பிடங்களை போதிய சமூக இடைவெளியுடன் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும். தியேட்டர் இருக்கைகளில் சமூக இடைவெளிக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். கொரோனா விழிப்புணர்வு படங்கள், சிலைடுகள் திரையிடப்படும். ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கிற்கு முன்னுரிமை தரப்படும். இதுபோன்ற பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாளை (இன்று) முதல் எல்லா தியேட்டர்களும் இயங்காது. பல தியேட்டர்களில் இன்னும் சுத்தப்படுத்தும் பணி முடியவில்லை. அதோடு திரையிடுவதற்கு படங்களும் இல்லை. வருகிற வெள்ளிக் கிழமை வெளியாகும் படங்களை பொறுத்து தியேட்டர்கள் திறக்கப்படும். மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் ஏற்கெனவே தயாராக உள்ளன. அவற்றில் திரையிட ஹாலிவுட் படங்களும், இந்தி படங்களும் தயாராக உள்ளது. அதனால் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் திறக்கப்பட்டு விடும். தியேட்டர்களில் இயல்பு நிலை திரும்பு இன்னும் சில நாட்கள் ஆகும். என்றார்.

தியேட்டர்கள் திறப்பதால் திரைக்கு வராமல் முடங்கி உள்ள 40-க்கும் மேற்பட்ட புதிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. படப்பிடிப்பு முடிந்து பல மாதங்களாக ரிலீசாகாமல் இருக்கும் விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்களை உடனடியாக திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

இதுபோல் படப்பிடிப்பு முடிந்த கங்கனா ரணாவத் நடித்துள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி, காஜல் அகர்வால் நடித்த கருங்காப்பியம், அருண் விஜய் நடித்துள்ள அக்னி சிறகுகள், சினம், சசிகுமார் நடித்துள்ள ராஜவம்சம், எம்.ஜி.ஆர் மகன், விஜய் ஆண்டனியின் தமிழரசன், எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை, விஷால், ஆர்யா நடித்துள்ள எனிமி, விக்ரம் பிரபுவின் டாணாக்காரன், கவுதம் கார்த்திக்கின் ஆனந்தம் விளையாடும் வீடு, சுந்தர்.சியின் அரண்மனை 3 ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன.

சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ், பிரபுதேவா நடித்துள்ள பாஹீரா, அசோக் செல்வன் நடித்துள்ள ஹாஸ்டல், ஹிப்ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம், அதர்வாவின் ஒத்தைக்கு ஒத்த, சந்தானம் நடித்துள்ள சபாபதி, சர்வர் சுந்தரம், திரிஷாவின் ராங்கி, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2, சிருஷ்டி டாங்கே நடித்துள்ள கட்டில், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓமன பெண்ணே, சிவாவின் சுமோ, இடியட், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், ஆர்.கே.சுரேசின் விசித்திரன் உள்ளிட்ட மேலும் பல படங்களும் திரைக்கு வர உள்ளன.

ஓ.டி.டியில் வெளியிட பேசி வந்த சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் தியேட்டரில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை, நயன்தாராவின் நெற்றிக்கண் படங்களையும் தியேட்டரில் திரையிட ஆலோசிக்கிறார்கள்.