”இந்தியா முழுக்க ரிலீஸ் ஆனா அது பான் இந்தியா திரைப்படம் இல்ல….” இயக்குனர் ஆர் வி உதயகுமார் பேச்சு!

0
105

”இந்தியா முழுக்க ரிலீஸ் ஆனா அது பான் இந்தியா திரைப்படம் இல்ல….” இயக்குனர் ஆர் வி உதயகுமார் பேச்சு!

‘கற்றது மற’ என்ற திரைப்படக் குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் சுசீந்திரன், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், “இன்று பல படங்கள் பான் இந்தியா என்ற பெயரில் வெளியாகின்றன. இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டால் அது பான் இந்தியா திரைப்படம் கிடையாது. மாறாக, நாடு முழுவதும் ரசிக்கப்பட்டால்தான் அது பான் இந்தியா திரைப்படம்.

எனவே கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உலகம் முழுவதும் ரசிக்கும்படியான திரைப்படங்களை உருவாக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் முக்கியம் கிடையாது; கதை தான் முக்கியம். எனவே, கதையில் இயக்குநர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், வெற்றிப்பெற வெற்றிப்பெற பணிவு வேண்டும் தலைக்கனம் இருக்கக் கூடாது எனக் கூறிய அவர் பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் பற்றிய ஒரு சுவாரஸ்ய சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார். நெல்சன் எப்படிப்பட்டவர் தெரியுமா இப்போ கிளம்பி வரும் போது தம்பி ஒருத்தர் போன் பண்ணியிருந்தார் எடுத்தேன். அண்ணே வணக்கம்னே.. டைரக்டர் யூனியன்ல கார்டு வாங்கிட்டேன்ணே.. கார்டு நல்லா சூப்பரா நயத்துடன் இருக்குன்னு சொன்னாரு.. சரி தம்பி நீ யாருப்பான்னு கேட்டேன்.. நான் தான் சார் நெல்சன்.. இப்போதான் விஜய் படம் ஒண்ணு பண்ணியிருக்கேன்னு சொன்னாரு.. எவ்வளவு பணிவா இருக்காங்க பாருங்க.. நெல்சனை மாதிரி இயக்குநர்களை நான் போற்றவும் பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன். எந்த இடத்துக்கு போனாலும், வந்த இடத்தை மறந்துடக் கூடாது.

இன்றைக்கு திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து பணத்தை பெறுவது தயாரிப்பாளர்களுக்கு கடினமாக உள்ளது. இன்று திரைப்படங்களை செல்போனில் பார்க்கும் வசதி வந்துவிட்டது. அடுத்தக்கட்டமாக க்யூ ஆர் கோடினை (QR CODE) பயன்படுத்தி 25 ரூபாய் செலவில் ஒரு படத்தை பார்க்கும் வசதியை கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன”. என அவர் கூறினார்.