அமேசான் ப்ரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது சூர்யாவின் “சூரரைப் போற்று” – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
351

அமேசான் ப்ரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது சூர்யாவின் “சூரரைப் போற்று” – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது ‘சூரரைப்போற்று’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:

Suriya’s ‘Soorarai Pottru’ To Release On Amazon Prime On October 30

இதுகுறித்து சூர்யா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகள் நம்பிக்கையின் ஊற்று. கண்ணுக்குத் தெரியாத வைரஸ் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் செயல்பாட்டையும் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில் பிரச்னைகளில் மூழ்கி விடாமல், நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம்.

இயக்குநர் சுதா கொங்கராவின் பல ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப்போற்று’ திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகச்சிறந்த படமாக இருக்கும். மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று நம்புகிற இத்திரைப்படத்தை திரையரங்கில் அமர்ந்து என் பேரன்பிற்குரிய சினிமா ரசிகர்களுடன் கண்டுகளிக்கவே மனம் ஆவல் கொள்கிறது. பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும், கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படத்தைச் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கிய கடமை.

எனது ‘2டி எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் இதுவரை எட்டு படங்களைத் தயாரித்து வெளியீடு செய்திருக்கிறது. மேலும் 10 படங்கள் தயாரிப்பில் உள்ளன. என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில் நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்.சூரரைப்போற்று திரைபப்டத்தை ‘அமேசான் ப்ரைம் வீடியோ’ மூலம் இணையம் வழி வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.

தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த இந்தமுடிவை திரையுலகை சார்வதவர்களும், என் திரைப்படங்களைத் திரையரங்கில் காண விரும்புகிற பொதுமக்களும், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த தம்பி, தங்கைகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் மனம் கவர்ந்த திரைப்படமாக ‘சூரரைப்போற்று’ நிச்சயம் அமையும்.

மக்கள் மகிழ்ச்சியோடு திரையரங்கம் வந்து படம்பார்க்கும் இயல்புநிலை திரும்புவதற்குள் கடினமாக உழைத்து, ஒன்றுக்கு இரண்டு படங்களில் நடித்து திரையரங்கில் ரிலீஸ் செய்துவிட முடியுமென நம்புகிறேன். அதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்.

இருப்பதை அனைவருடன் பகிர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு. இந்த எண்ணத்தை இன்றளவும் செயல்படுத்தியும் வருகிறேன். சூரரைப்போற்று வெளியீட்டு தொகையில் இருந்து தேவையுள்ளவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க முடிவு செய்திருக்கிறேன்.

பொது மக்களுக்கும், திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கொரோனா யுத்த களத்தில் முன் நின்று பணியாற்றியவர்களுக்கும் இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும். உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவும், வாழ்த்தும் தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த நெருக்கடி சூழலை மனவுறுதியுடன் எதிர்த்து மீண்டும் எழுவோம்.”இவ்வாறு சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.