`அதிகமாக சம்பளம் கேட்கும் நடிகர்கள், கலைஞர்கள் எங்களுக்கு வேண்டாம்’- ஆர்.கே.செல்வமணி

0
144

`அதிகமாக சம்பளம் கேட்கும் நடிகர்கள், கலைஞர்கள் எங்களுக்கு வேண்டாம்’- ஆர்.கே.செல்வமணி

இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் 10 பேருக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் பெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் 23 சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அந்தச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் இந்த 10 படங்களிலும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, உதயகுமார், பேரரசு மற்றும் தயாரிப்பாளர்கள் சரவண பிரசாத், தேனாண்டாள் முரளி, ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “இயக்குனர் சங்க உறுப்பினர்கள் இயக்கவுள்ள இந்த 10 திரைப்படங்களுக்கு கதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த படங்களை இயக்கும் அவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக படத்தின் பட்ஜெட்டில் 40 சதவீதத்தை மட்டுமே நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு சம்பளமாக வழங்க வேண்டும் – மீதமுள்ள 60 சதவீதத் தொகையை படத்திற்காக செலவிட வேண்டும் என நிபந்தனை உள்ளது. அதேபோல் அதிக சம்பளம் கேட்கும் நடிகர்களும், கலைஞர்களும் எங்களுக்குத் தேவையில்லை.
அதேபோல் தமிழ் நடிகர்களை வெளிமாநிலங்களில் உள்ள 50 சதவீதம் பேருக்கு மட்டுமே தெரியும். அதுவே இந்தியாவிற்கு வெளியில் அவர்களை யாருக்கும் தெரியாது. வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு நடிகர் யார், இயக்குனர் யார் என்பது தேவையில்லை. அவர்களுக்குத் தேவை கதை! அதை சரியாக செய்ய வேண்டும். அதை நாம் செய்வோம்” என்றார்.

இதன்பின் பேசிய இயக்குநர் பேரரசு, “தமிழ் சினிமா சமீபகாலமாக பின்னடைவை சந்தித்து விட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அனுபவமில்லாத இயக்குனர்கள் வைத்து படம் எடுத்தால் இந்த நிலைமைதான் வரும். இரண்டு மூன்று படங்கள் எடுத்தால் உடனே பெரிய இயக்குனர்கள் என தூக்கி கொண்டாடப்படுகிறார்கள். யாராக இருந்தாலும் நடிகர்களுக்கு முக்கியத்துவம் என்பதை தாண்டி, கதையில் கவனம் செலுத்தி நேர்த்தியான படங்கள் கொடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.