சிறுநீரகம் செயலிழந்த ஆண் நோயாளிக்கு, சென்னை, மெட்வே ஹார்ட் இன்ஸ்டிட்டியூட்டில் வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சை!

0
168

சிறுநீரகம் செயலிழந்த ஆண் நோயாளிக்கு, சென்னை, மெட்வே ஹார்ட் இன்ஸ்டிட்டியூட்டில் வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சை!

 சென்னை, சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவக் குழுமமான மெட்வே மருத்துவமனையில் (Medway Hospitals) உள்ள மெட்வே ஹார்ட் இன்ஸ்டிட்டியூட்டின் (Medway Heart Institute) மருத்துவர் குழு, சிறுநீரகம் செயலிழந்த 32 வயது ஆணுக்கு மிகவும் சவாலான பெருந்தமனி (Aortic Dissection) சார்ந்த அறுவை சிகிச்சையை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

நோயாளியின் விவரம், சிகிச்சை முறை:

திருவண்ணாமலையைச் சேர்ந்த திரு. ராஜ்குமாருக்கு சிறுநீரகச் செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளின் காரணமாக நெஞ்சு, முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது. உள்ளூர் மருத்துவர்கள் மேற்கொண்ட எக்கோ, ஸ்கேன் பரிசோதனைகளில், அவருக்குப் பெருந்தமனி சார்ந்த பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. இது தீவிர நோயுற்ற தன்மை, இறப்புடன் தொடர்புடைய உயிருக்கு ஆபத்தான மருத்துவ நிலை ஆகும். இப்படிப்பட்ட மோசமான நிலையில், அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னையில் உள்ள மெட்வே ஹார்ட் இன்ஸ்டிட்டியூட்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சரியான நேரத்தில் அவர் அனுப்பப்பட்டார்.

சிக்கலான இந்த அறுவை சிகிச்சை குறித்து, மெட்வே ஹார்ட் இன்ஸ்டிட்டியூட்டின் இயக்குநர் – தலைமை மருத்துவர், கார்டியோ வாஸ்குலர் & தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் (Cardio Vascular & Thoracic Surgeon) டாக்டர் அன்பரசு மோகன்ராஜ் கூறுகையில், “சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் செய்யும் நிலையில் இருந்ததுடன், இரண்டு இதய வால்வுகளில் கசிவு இருந்தது, ராஜ்குமாரின் பெருந்தமனி சார்ந்த அறுவை சிகிச்சையில் உள்ள சிக்கலை தீவிரப்படுத்தியது. இது அறுவை சிகிச்சையை பெரிய சவாலாக மாற்றியது. சிக்கலான இந்த அறுவை சிகிச்சை ஆறு மணி நேரம் நீடித்தது, அவரது உடலை 18 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை வரை குளிரூட்ட வேண்டியிருந்தது. அத்துடன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது உடலின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரத்தம் பாய்வதை நிறுத்த வேண்டியிருந்தது. அதன் பிறகே அவரது இரண்டு வால்வுகளையும் சீரமைத்து, பெருந்தமனி பிரச்சினையை சரிசெய்ய முடிந்தது.

செயற்கை உலோக வால்வைப் பொருத்துவதற்கு மாறாக அவருடைய இரண்டு இதய வால்வுகளும் இப்போது சீரமைக்கப்பட்டுவிட்டன. இதன் காரணமாக, ரத்த அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகளை அவர் இனி எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எதிர்காலத்தில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எளிதாகவும் சமாளிக்கக்கூடிய வகையிலும் மேற்கொள்ள முடியும்” என்றார்.

மெட்வே மருத்துவமனைகளின் தலைவரும், மேலாண் இயக்குநருமான டாக்டர் டி. பழனியப்பன், இந்த அறுவை சிகிச்சையைப் பாராட்டிப் பேசுகையில், “இந்த வகை சிக்கல் மிகுந்த நோய்நிலைகளுக்கான சிகிச்சைகள், சென்னையில் ஒரு சில உயர் மருத்துவ மையங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. ஏனென்றால் இதற்கு மேம்பட்ட அறுவை சிகிச்சை திறன்கள், சமீபத்திய தொழில்நுட்ப வசதிகள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள், அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களைக் கொண்ட ஒரு சிறப்பு மையமாக மெட்வே ஹார்ட் இன்ஸ்டிட்டியூட் இருப்பதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற சிக்கலான இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எங்கள் குழு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் மேற்கொண்டு ராஜ்குமாரின் உயிரைக் காப்பாற்றி, புது வாழ்வு அளித்ததற்காக டாக்டர் அன்பரசு மோகன்ராஜ் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்துகிறேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராஜ்குமார் சிறந்த வகையில் உடல்நலம் தேறிவருகிறார். விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்” என்றார்.

பெருந்தமனி சார்ந்த மருத்துவப் பிரச்சினை குறித்து (Aortic Dissection):

 பெருந்தமனி துண்டிப்பு என்பது ஒரு மருத்துவ அவசரநிலை. இதயத்தில் இருந்து கிளைத்த பெரிய ரத்தக் குழாயின் உள் அடுக்கு கிழிவதால் இது ஏற்படுகிறது. இந்தக் கிழிசல் வழியாக ரத்தம் வேகமாகப் பாய்கிறது, இதனால் பெருந்தமனியின் உள், நடு அடுக்குகள் பிளவுபடுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.