இந்தியாவைப் பார்த்து காங்கோ வேளாண் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் வளர்ச்சியடைந்துள்ளதாக காங்கோ தூதர் ரேமண்ட் செர்கே பேலே தெரிவித்துள்ளார்.
கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய செமாக் வர்த்தக கவுன்சில் மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் தலைவர் ஆசிஃப் இக்பால், காங்கோ நாட்டின் தூதர் ரேமண்ட் செர்கே பேலே, இந்திய செமெக் வர்த்தக கவுன்சிலின் சென்னை மண்டல தலைவர் சனித் விஜய்குமரன், வெளியுறவு அமைச்சகத்தின் செயலக தலைவர் வெங்கடாசலம் முருகன் ஐ.எஃப்.எஸ் மற்றும் தென்னிந்திய வணிகக் குழுவினர் கலந்து கொண்டனர். CEMAC இன் இலக்கான மத்திய ஆப்பிரிக்க பொது சந்தையை நிறுவுவதின் முதற்படிகட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளுடனான வணிக உறவு குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய செமாக் டிரேட் கவுன்சில் அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய காங்கோ தூதர், இந்தோ காங்கோ வர்த்தக உறவுகள் இன்றியமையாதவை என்றும், இந்தியாவுக்கும் காங்கோவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளின் வளர்ச்சியைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த வர்த்தக உறவை பலப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளும் பயன்பெற முடியும் என்றார். இந்திய வர்த்தகர்கள் நல்ல புரிதலோடு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர், மியான்மருக்கான கௌரவ தூதர் பேராசிரியர் ரங்கநாதன் பேசும்போது, ஜி 20 இல் இந்தியா வகிக்கும் பங்கு பற்றியும், வர்த்தக உறவுகளை வலுப்படுத்த அயல்நாடுகளுக்கு வாய்ப்புகளை வழங்கும் வலுவான நகரமாக சென்னை இருப்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த மாநாட்டை தொடர்ந்து இந்தியா மற்றும் செமாக் இடையே இந்த வர்த்தக வாய்ப்புகளை வலுப்படுத்த, இந்திய செமாக் வர்த்தக கவுன்சிலின் பிரதிநிதிகள் குழு இந்த ஆண்டு காங்கோவில் உள்ள பிரஸ்ஸாவில்லிக்குசெல்ல உள்ளது.