
என்.ஐ.க்யு.ஆர். அமைப்பின் 17–ஆவது உலகளாவிய தரம் சார்ந்த மாநாடு, செப். 15, 16 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்!
சென்னையை தலைமையகமாகக் கொண்ட தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான தேசிய அமைப்பாகிய நேஷனல் இன்ஸ்ட்டிட்யூஷன் ஃபார் குவாலிட்டி அண்ட் ரிலையபிலிட்டி (National Institution for Quality & Reliability – NIQR), இந்தியாவில் தரத்தை மேம்படுத்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று வரும் முதன்மை அமைப்பாகும். சென்னை வர்த்தக மையத்தில் செப்டம்பர் 15-16 தேதிகளில் 17-ஆவது சர்வதேச மாநாட்டை இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. ‘உலகளாவிய சிறப்பை நோக்கி – இந்தியாவின் எழுச்சி’ (Rise of India – Towards Global Excellence) என்ற கருப்பொருளுடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தொழில்களின் வெற்றிக் கதைகளை வெளிப்படுத்தி, தரத்தில் உலகளாவிய தலைமையகமாக இந்தியாவை உயர்த்துவதற்கு இளைய தலைமுறையினரை இந்த மாநாடு ஊக்குவிக்கும்.
இதனை செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று அசோக் லேலண்டின் சோர்சிங் & சப்ளை செயின் பிரிவின் மூத்த துணைத் தலைவர் திரு. சுதிர் சிக்லே (Mr. Sudhir Chikhle), தொடங்கி வைக்கவுள்ளார். செப்டம்பர் 16 அன்று நடைபெறும் என்.ஐ.க்யு.ஆர். (NIQR) விருது வழங்கும் விழாவில், ஐ.ஐ.டி. மெட்ராஸின் இயக்குநர் திரு. வி. காமகோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
மாநாட்டில் பின்வரும் ஆறு அமர்வுகள் நடைபெற இருக்கின்றன: உலகளாவிய வாய்ப்புகளுக்கான நுழைவாயில் (Gateway for Global Opportunities); வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்ளுதல் (Absorbing Emerging Technologies) வணிகச் சிறப்பை அடைவதற்கான பாதை (Path to Business Excellence) ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை எளிதாக்குதல் (Easing Regulatory Compliances); இந்திய ஏற்றுமதிகள்–வெற்றிக் கதைகள் (Indian Exports-Success Stories); தடைகளை மீறுதல் (Surmounting Barriers) ஆகியன ஆகும். புதிய சிந்தனைகளை முன்வைக்கும் தலைவர்கள், துறை வல்லுநர்கள், தொழில்துறைத் தலைவர்கள் இம்மாநாட்டில் உரையாற்றுகிறார்கள். சென்னை, காவேரி மருத்துவமனை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். எஸ். மணிவண்ணன், டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் திரு. ரவிகாந்த், செயின்ட்–கோபெய்ன் கிளாஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த திரு. ஐசனோவர் சுவாமிநாதன், இசட்.எப். ரானே ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. ஜி. பார்த்திபன், சென்னை சி.டி.எஸ். நிறுவனத்தின் மூத்த இயக்குனர் திரு. எஸ். ரகுவீரன், அதானி குழுமத்தின் ஆட்டோமேஷன் & திட்டங்கள் பிரிவின் தலைவர் டாக்டர் கௌரவ் சிங், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர். ராஜா முனுசாமி, ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. ஸ்ரீதர் வேம்பு, ரானே மெட்ராஸ் நிறுவனத்தின் தலைவர் திருமதி. கௌரி கைலாசம், ஐ.பி.எம். சொல்யூஷன் ஆர்கிடெக்ட் நிறுவனத்தைச் சேர்ந்த திரு. மகேஷ் ராஜாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய என்.ஐ.க்யு.ஆர். அமைப்பின் தேசியத் தலைவர் திரு. எஸ். முரளி சங்கர், “இந்தியத் தொழில்துறை நிறுவனங்களிடையே தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதில் முதன்மையானது எங்களுடைய அமைப்பாகும். தேசியக் கருத்தரங்குகள், மாநாடுகள், விரிவுரைகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் மூலம் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ள தனிநபர்கள், நிறுவனங்களை நாங்கள் தயார்படுத்தியுள்ளோம்” என்றார்.
இது குறித்து என்.ஐ.க்யு.ஆர். சென்னை கிளையின் தலைவர் திரு. பி.டி. பரணி பெருமாள் கூறுகையில், “சர்வதேச தரத்துக்கான இயக்கத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்திய நிறுவனங்கள் உலகளாவிய வளர்ச்சிக்கான மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளன. இதற்கு அவற்றின் இளம், ஆற்றல் மிகுந்த, திறமையான பணியாளர்களுக்கே நன்றி சொல்ல வேண்டும். தரத்தில் சிறந்து விளங்கும் பல இந்திய நிறுவனங்கள் தங்கள் அனுபவங்களையும் வெற்றிக் கதைகளையும் இந்த நிகழ்வில் பகிர்ந்துகொள்ள இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சிறந்த கற்றலுக்கான வாய்ப்பாக இந்த மாநாடு இருக்கும்” என்றார்.
என்.ஐ.க்யு.ஆர். அமைப்பின் மூத்த துணைத் தலைவர் டாக்டர் வி. சுவாமிநாதன் கருத்து கூறுகையில், “சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (MSME) சார்ந்து இந்த மாநாடு சிறப்பு கவனம் செலுத்தும். பொருளாதார வளர்ச்சியில் இந்த நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த நிறுவனங்கள் 30 சதவீதத்துக்கும் மேல் பங்களிக்கின்றன. உண்மையில், அவை கிட்டத்தட்ட 50 சதவீதம் ஏற்றுமதிப் பொருள்களை உருவாக்குகின்றன. உள்நாட்டு, சர்வதேச விநியோகச் சங்கிலி என இரண்டிலும் முக்கியமானவையாகத் திகழ்கின்றன. எம்.எஸ்.எம்.இ.-க்களுக்கு ஆதரவான பல திட்டங்களை இந்திய அரசாங்கம் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டங்களின் பலன்களை பல நிறுவனங்கள் பெறுவதற்கு இந்த மாநாடு ஊக்குவிக்கும்.
இந்தியத் தொழில் துறை மற்றும் நிறுவனங்கள் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கு தகவமைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இந்த மாநாடு வலியுறுத்தும். ஆட்டோ மொபைல், விண்கலம் உற்பத்தியில் தொடங்கி, சுகாதாரம், சேவைத் தொழில்கள் வரை அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) வளர்ச்சி, மிகப்பெரிய முன்னேற்றத்திற்கான திறனை வழங்குகின்றன.
குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum Computing), மெட்டாவெர்ஸ் (Metaverse), மூளை – கணினி இடைமுகங்கள் (Brain Computer Interfaces), செயற்கை உயிரியல் (Synthetic Biology), மேம்பட்ட ரோபாட்டிக்ஸ் (Advanced Robotics), தானியங்கி (Automation) போன்ற மேம்பட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள தொழில் துறை தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் என்.ஐ.க்யு.ஆர். அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவர் திரு. எஸ். ராஜசேகரன், தேசிய பொருளாளர் திரு. வி. ராகவன், தேசிய கவுன்சில் உறுப்பினர் திரு. சி.வி. கௌரி சங்கர், என்.ஐ.க்யு.ஆர். சென்னை கிளையின் செயலாளர் டாக்டர் வி.எஸ்.வி. வேர்செழியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.