2 ஆண்டுக்கு பின் நடைபெறும் திருச்செந்தூர் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

0
188

2 ஆண்டுக்கு பின் நடைபெறும் திருச்செந்தூர் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

9-ம் திருநாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

மாசித்திருவிழாவின் 10-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) காலை 6.30 மணியளவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. முதலில் விநாயகர் தேர், 2-வது சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளும் பெரிய தேர், 3-வது தெய்வானை அம்பாள் எழுந்தருளும் தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக வெளிவீதி நான்கிலும் பவனி வரும் காட்சி கண்களை கொள்ளை கொண்டது.

இந்த திருவிழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. 2 ஆண்டுக்கு பின் இன்று தேரோட்டம் நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.