காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி அறை திறப்பு…

0
253

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி அறை திறப்பு…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி அறை இன்று திறக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் பழமையும் வரலாற்று சிறப்பும் மிக்க வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் 1961-இல் கண்ணாடி அறை புதிதாக அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 2006 இல் அந்த அறை பழுது பார்க்கப்பட்டது. இந்நிலையில் கண்ணாடிகளின் பாதரசமும் அதிலிருந்த மரக்குச்சிகளும் செல்லரித்துப் போயிருந்தது. இதனால் பெருமாளின் பக்தர்களில் ஒருவரான தாமல்.எஸ்.நாராயணன் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் முழுவதுமாக திருப்பணி செய்து கண்ணாடி அறையை புதுப்பித்தார்.

இதற்கான திறப்பு விழாவில், கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட கண்ணாடி அறையில் உற்சவர் தேவராஜ சுவாமி ஸ்ரீதேவி – பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன. திருக்கோவில் அர்ச்சகர்கள் ஸ்தானீகர்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அர்ச்சனை செய்தனர்.

உபயதாரர்கள் தாமஸ் நாராயணன் கோவில் நிர்வாகத்தினால் கௌரவிக்கப்பட்டார். பக்தர்கள் அதிகாலை நீண்ட நேரம் காத்திருந்து உற்சவர் தேவராஜ சுவாமி கண்ணாடி அலங்காரத்தை தரிசித்தனர்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை நவராத்திரி உற்சவம் தொடங்குகிறது. தினசரி காலையில் பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும் மாலையில் பெருமாளும் தாயாரும் திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் திருவீதியுலா வரவுள்ளனர்.