த்ரிஷா விவகாரம் – மறு ஆய்வு செய்யக்கோரி மன்சூர் அலிகான் மனு

0
107

த்ரிஷா விவகாரம் – மறு ஆய்வு செய்யக்கோரி மன்சூர் அலிகான் மனு

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த அபராதத் தொகையை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டு, அதற்கான கால அவகாசத்தையும் நீட்டித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவிற்கு தடைவிதிக்க மறுத்து, அந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி தனி நீதிபதி முன்பே முறையிடும்படி அறிவுறுத்தினர்.

அதன்படி, தனது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனு மீதான விசாரணையை பிப்ரவரி 13ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.