ஒரே இரவில் நடக்கும் கதை ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’

0
218

ஒரே இரவில் நடக்கும் கதை ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..என்ற பாடலையும் அதற்கான காட்சிகளையும் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். அதையே தலைப்பாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.
இயக்கியிருப்பவர் கேஷவ் தெபுர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், ஒரியா, பெங்காலி என்று இந்திய மொழிகளில் சுமார் 350 திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணி புரிந்திருக்கிறார். நடன இயக்குநர்கள் பிரபுதேவா,RRR படத்தில் ஆஸ்கார் விருதை வென்ற ‘நாட்டு நாட்டு ‘  பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித், ராகவா லாரன்ஸ் போன்றவர்களிடம் உதவி நடன இயக்குநராகப் பணியாற்றியவர்.பல்வேறு மொழிகளில் நடனக் கலைஞராக சுமார் 2000 படங்களில் தோன்றி ஆடியவர். அப்படிப்பட்ட நடன இயக்குநர் இயக்கி உள்ள படம் இது. படத்திற்கு இசை ஜி. கே. வி , ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ்.
இப்படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல்  , KPY ஒய் பாலா , மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா ,அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி ,ஜெஃபி, ஜெயவாணி, அக்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர்.
லேடீஸ் ஹாஸ்டலுக்குள்  நுழைந்த சில வாலிபர்கள் ஒரு க்ரைமுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் .அதிலிருந்து அவர்கள்  வெளிவந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் ஒன்லைன்.
அதற்கிடையே நடக்கும் பரபரப்பான விறுவிறுப்பான கிளுகிளுப்பான சம்பவங்கள் தான் கதை செல்லும் பாதை. க்ரைம், ஆக்சன், ஹாரர் அனைத்தும் நிரம்பிய ஒரு கதையாக இது இருக்கும்.
இதன் தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்டமியிடம் கேட்டபோது….
 ” இப்படத்தின் கதை ஒரே இரவில் நடக்கிறது. பெல்லாரி ராஜாவும் தாமோதரனும் அரசியலில் ஒன்றாக இருந்து பகைவர்களாக மாறியவர்கள்.பெல்லாரி ராஜா அந்த தாமுவைக் கொன்று விடுகிறான்.அதை நேரில் பார்த்த பெண் வீடியோ எடுத்து விடுகிறாள் .அவளைத் துரத்துகிறது பெல்லாரியின் கும்பல்.அவள் எஸ்.ஆர்.லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஓடிப் போகிறாள்.லேடிஸ் ஹாஸ்டலுக்குள் இளைஞர்கள்  இரண்டு பேர் நுழைந்து விடுகிறார்கள். அங்குள்ள இரு பெண்களால் ஒரு கால் பாய் அழைக்கப்படுகிறான்.ஆள் மாறாட்டக் குழப்பத்தில் ஒரு கொலை நடக்கிறது.இப்படி அடுத்தடுத்த கொலைகள் ,பரபரப்பு விறுவிறுப்பு கொண்ட பின்னணியில் இக்கதை உருவாகியுள்ளது”என்கிறார் தயாரிப்பாளர்.
படத்தில் இடம்பெற்றுள்ள இக்கால இளைஞர்களும் யுவதிகளும் பேசும் அரட்டைகளும் , சுதந்திரமான காட்சிகளும் பார்த்து அதிர்ந்து போன சென்னை மண்டல தணிக்கை அதிகாரி அறுபது வெட்டுகள் கொடுத்திருந்தார்.ஆனால் அதையும் மீறி  மும்பை சென்று மறு தணிக்கை செய்து வந்துள்ளார்கள். இப்படத்தை
ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி  என்கிற பெண்மணி தைரியமாகத் தயாரித்துள்ளார்.படத்துக்கான கதை பிடித்துப் போனதால் இப்படத்தைத் தயாரித்ததாக அவர் கூறுகிறார்.
 9 V ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படம் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.